22 செப்டம்பர், 2010

புதையல் தோண்டிய வாகரை ஏ.எஸ்.பி கைது 7 கான்ஸ்டபிள்களும் 2 சிவிலியன்களும் உடந்தை

பொலன்னறுவை, புராதன சிறிபுர ரஜமகா விகாரையை அண்மித்த காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின்பேரில் வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பத்துப் பேரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட எட்டு பொலிஸாரும், இரண்டு சிவிலியன்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

மேற்படி காட்டுப் பகுதியில் இவர்கள் நேற்று முன்தினம் இரவு புதையல் தோண்டியதன் சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பிரதேச மக்கள் வழங்கிய இரகசியத் தகவலை அடுத்து மன்னம்பிட்டிய சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்த ஆயுதங்களையும் இவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :-

சிறிபுர ரஜமகா விகாரையை அண்மித்த காட்டுப் பகுதியில் ஒரு குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததை அவதானித்த பிரதேசவாசிகள் சம்பந்தப்பட்டவர்களை மடக்கிப் பிடிக்கும் பொருட்டு விகாரையின் மணியை ஒலிக்கச் செய்துள்ளனர்.

உடனடியாக அங்கு பிரதேச வாசிகள் ஒன்று கூடுவதை அறிந்த ஒன்பது பேரும் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களை அதே இடத்தில் கைவிட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து பிரதேச மக்கள் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பான தகவலைத் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து பொலன்னறுவை பிரதேசத்தை சுற்றிவளைத்த விசேட பொலிஸ் குழு வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட எட்டு பொலிஸாரையும், இரண்டு சிவிலியன்களையும் மடக்கிப் பிடித்துள்ளது. இவர்கள் அனைவரும் நேற்று மாலை, பொலன்னறுவை மஜிஸ்ட்ரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்ப ட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை களை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக