22 செப்டம்பர், 2010

தாய்லாந்தில் திடீர் சுற்றிவளைப்பு : 13 இலங்கை அகதிகள் கைது

தாய்லாந்து லப்ராவ் என்ற இடத்தில், அந்நாட்டுக் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலின்போது 13 இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் விசா இன்றி அங்கு தங்கியிருந்தவர்கள் என்றும் தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்தவர்கள் என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.



நேற்றுக் காலை 11.30 மணியளவில் லப்ராவ் பிரதேசத்தைத் திடீரெனச் சுற்றி வளைத்த தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் இவர்களைக் கைதுசெய்து, அழைத்துச் சென்றுள்ளனர்.

இதுபற்றி தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கையில்,

"தாய்லாந்திலிருந்து குடியேற்றவாசிகளின் 2ஆவது கப்பல் புறப்படத் தயாராகவுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதிகமான அகதிகள் குறித்த கப்பலில் புறப்படவிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

குறித்த கப்பலில் செல்வதற்காக அதிகமானோர் தாய்லாந்தில் குடியேறி வருகின்றனர்.

எனவே இவ்வாறான சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்"என்றனர்.

இதன் காரணமாக, தம்மை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அகதிகளாகப் பதிவு செய்து, தாய்லாந்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் பெரும் பதற்றத்துடன் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக