24 செப்டம்பர், 2010

வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பில் தமிழில் கருமமாற்றக் கூடிய 593 பொலிஸார் விரைவில் கடமை




தமிழ் மொழியில் நன்கு கருமமாற்றக் கூடிய 593 பொலிஸார் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் விரைவில் சேவையில் ஈடுபடுத்தப்படுவர் என்று பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

தமிழ் மொழியை நன்றாக எழுத, வாசிக்க, முறைப்பாடுகளைப் பதிவு செய்யக்கூடிய வகையில் ஐந்து மாத கால கற்கை நெறியை முடித்துக் கொண்டு இவ்வாண்டு டிசம்பரில் 593 பொலிஸார் வெளியேற உள்ளதாகத் தெரிவித்த அவர், இவர்கள் உடனடியாக மேற்படி பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.

தமிழ் மொழியில் நன்கு கருமமாற்றக் கூடிய வகையில் வருடமொன்றுக்கு 1200 பொலிஸார் என்ற அடிப்படை யில் ஐந்தாண்டு காலத்திற்குள் 6000 பொலிஸார் பயிற்றுவிக் கப்படவுள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை பொலிஸ் தலைமையகத்திலுள்ள பொலிஸ் மா அதிபரின் மாநா ட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிடுகையில்:-

பொலிஸார் மத்தியில் தொழில்சார் வளர்ச்சியை மேம்படுத்த பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதியினதும், பாதுகாப்புச் செயலாளரினதும் ஆலோசனைக்கமைய இதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பொலிஸாரை தேர்ச்சியடையச் செய்வதுடன் அவர்களுக்குத் தேவையான துறைகள் பயிற்சிகளையும், கற்கைகளையும் வழங்குவதே எனது பிரதான குறிக்கோளாகும் என்றார்.

விஷேடமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பின்னர் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் தற்பொழுது பொலிஸ் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டும், செயற்பட்டும் வருகின்றன. இந்த மாகாணங்களில் வாழும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இந்த அடிப்படையில் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறுபவர்கள் விரைவில் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்றார்.

களுத்துறை, அனுராதபுரம், வவுனியா, மட்டு, கல்லடி, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஆகிய பொலிஸ் பயிற்சி நிலையங்களில் வருடந்தோறும் 1200 பேர் பயிற்றுவிக்கப்படவுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

புதிய பொலிஸ் நிலையங்கள் அதேவேளை புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கிளிநொச்சி மற்றும் மாங்குளம் பொலிஸ் நிலையங்களின் நிர்மாணப்பணிகள் அடுத்த மாத இறுதியில் முடிவுறும் என்று தெரிவித்த அவர், நவம்பர் மாத ஆரம்பப் பகுதியில் இந்த இரு பொலிஸ் நிலையங்களும் திறந்து வைக்கப்படவுள்ளது என்றார்.

இது தவிர, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, முல்லைத்தீவு, மல்லாவி, ஒட்டுச்சுட்டான், பியகம, இரத்தினபுரி, தியத்தலாவ, மொரவெவ மற்றும் வெலிப்பன்ன ஆகிய பகுதிகளில் புதிதாக பொலிஸ் நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் பொலிஸ் நிலையங்களைப் புனரமைக்கத் திட்டமிட்டுள்ளது என்றும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

இதே வேளை, தமிழ், முஸ்லிம்களை பொலிஸில் இணைத்து அவர்களுக்குத் தேவையான உரிய பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான என். கே. இளங்ககோன், காமினி நவரட்ன, ஐயந்த கமகே, பிரதிப் பொலிஸ் மாஅதிபர்களான சிசிர மென்டிஸ், அநுர சேனநாயக்க, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக