8 ஜூலை, 2010

பார்வதி அம்மாள் எப்போது கோரிக்கை விடுத்தாலும் விசா வழங்க வேண்டும்

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் எப்போது கோரிக்கை விடுத்தாலும் விசா வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றில் பொதுநலன் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பார்வதி அம்மாள் இந்தியாவில் தங்கி சிகிச்சை பெறும் முடிவை தள்ளி வைத்திருக்கிறார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பாலசுப்பிரமணியம் கந்தவேலு விஸ்வநாதன் ஆகியோர் கடந்த மே மாதம் 11 ஆம் திகதி கொழும்பிலுள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பார்வதி அம்மாளை சந்தித்து பேசினார்கள். அவர் இந்தியாவில் தங்கி சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்றும் அவருடைய மருத்துவச் செலவை தமிழக அரசே ஏற்க முன்வந்திருக்கிறது என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

அவர் பேச முடியாத நிலைமையில் இருந்தார். அவருடன் இருந்த ஆர். சம்பந்தன் எம்.பி மறுநாள் அவர்களை சந்தித்து பேசினார். தற்சமயம் இந்தியா வந்து சிகிச்சை பெறும் முடிவை பார்வதி அம்மாள் தள்ளி வைத்திருக்கிறார் என்று சம்பந்தன் தெரிவித்திருக்கிறார் என்று மத்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று வரை வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது என்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே பார்வதி அம்மாள் எப்போது கோரிக்கை விடுத்தாலும் விசா வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக