23 ஜூன், 2010

செம்மொழி மாநாடு இன்று துவங்குகிறது







கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை "கொடிசியா' மைதானத்தில் இன்று கோலாகலமாக துவங்குகிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். வரும் 27ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டினால், கோவையே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் அறிஞர்கள் கோவையில் குவிந்துள்ளனர்.
"கொடிசியா' மைதானத்தில் இன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு துவங்குகிறது. துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்கிறார். மாநாட்டு சிறப்பு மலரை, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிட்ட பின், நிதியமைச்சர் அன்பழகன் பேசுகிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பின்லாந்து நாட்டு பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, "கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்கி கவுரவிக்கிறார்.
பேராசிரியர் அஸ்கோ பர்போலா ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி தலைமையுரையாற்றுகிறார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தொடக்கவுரையாற்றுகிறார். மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழர் இலக்கியம், கலை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கி, அவினாசி ரோடு வழியாக சென்று, மாநாட்டு வளாகத்தை அடைகிறது.
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை பீளமேடு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மேடையில் இருந்து ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் பார்வையிடுகின்றனர். மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் பார்வையிட, அவினாசி சாலையில் பல இடங்களில் பார்வையாளர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை வ.உ.சி., பூங்கா மைதானம் முதல் ஹோப் காலேஜ் வரை சாலையின் இரு பக்கங்களிலும் நின்று கண்டுகளிக்கலாம்.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்றிரவு கோவை வந்தார். கோவை சர்க்யூட் ஹவுசில் தங்கியிருக்கும் அவர், இன்று காலை 10.30 மணிக்கு நடக்கும், மாநாடு துவக்க விழாவில் கலந்து கொள்கிறார். துவக்க விழா, 11.40 மணிக்கு முடிந்ததும், சர்க்யூட் ஹவுஸ் சென்று ஓய்வு எடுக்கிறார்.
பின், மாலை 5.30 மணிக்கு, கோவை மருத்துவக் கல்லூரிக்கு வந்து, அங்குள்ள மேடையில் இருந்து, "இனியவை நாற்பது' என்ற பெயரில் நடக்கும் மாநாட்டுப் பேரணியை கண்டு களிக்கிறார். இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, கோவை விமான நிலையம் செல்கிறார். 7.25 மணிக்கு, விமானப்படை விமானம் மூலம் டில்லிக்கு புறப்படுகிறார்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா, கனடா, மொரீஷியஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் நேற்று காலை முதல் கோவை வரத்துவங்கினர். அவர்கள் தங்குவதற்கு நகரில் பல ஓட்டல்கள் மற்றும் கல்லூரி விடுதிகளில், அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மாநாட்டுக்கு முன்பே மக்கள் "படையெடுப்பு
நேற்றே பல ஆயிரம் மக்கள் குடும்பத்துடன் வந்திருந்து, மாநாட்டு வளாகத்தை பார்வையிட்டனர். அவினாசி சாலை முதல் மாநாட்டு மேடை அமைந்துள்ள பொது அரங்க வளாகம் வரை சாலை நெடுகிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக நடந்து சென்று அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய அரங்கங்களை பார்வையிட்டனர். மாநாட்டை முன்னிட்டு, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், பலரும் குடும்பத்துடன் வந்திருந்தனர். போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநாடு துவங்கும் முன்பே 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர், வந்து சென்றுள்ளனர். இதனால், மாநாட்டின் போது பல லட்சம் மக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பு உள்ளது' என்றார்.
10 அடிக்கு ஒரு போலீஸ்:
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு செல்லும் அவினாசி சாலையின் பாதுகாப்பு பணிக்காக மட்டும் 1,000 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பத்து அடிக்கு ஒரு போலீஸ் வீதம் சாலையின் இரு புறங்களிலும் நேற்று காலை முதலே நிறுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி, முதல்வர், துணை முதல்வர், வெளிநாட்டு சிறப்பு அழைப்பாளர்கள் அணிவகுப்பை பார்வையிடுவதற்கான மேடைகள் தோறும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மாநாட்டு பொதுஅரங்க வளாகத்தை அடுத்துள்ள, "கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்துக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்குதான், ஆய்வரங்கம், முகப்பரங்க பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும் சிறப்பு பொழிவரங்க நிகழ்வுகள் நடக்கின்றன. தமிழறிஞர்கள், கட்டுரையாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட 4,600 பேர் பங்கேற்கின்றனர். இவ்வளாகத்துக்குள், பங்கேற்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் தவிர பிறருக்கு அனுமதியில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக