23 ஜூன், 2010

பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு நியமனம் : செயலாளர் தகவல்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில், தமக்கு ஆலோசனை வழங்கும் வகையில் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளார்.

இந்த தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் மார்டின் நெசிர்கி இன்றைய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார்.

இந்தோனேஷியாவின் முன்னாள் சட்டத்தரணிகள் நாயகம் மர்சுகி டாருஸ்மன் தலைமையிலான இந்தக்குழுவில், தென்னாபிரிக்காவின் மனித உரிமை சட்டத்தரணி யஸ்மின் சூக்கா மற்றும் அமெரிக்க சர்வதேச சட்ட நிபுணர் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிபுணர் குழு, 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனுக்கும் இலங்கையின் ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கூட்டு அறிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் நடைமுறை தொடர்பில், ஆராயவுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளின் போது சர்வதேச சட்டங்கள் பின்பற்றப்பட்டனவா என்பது தொடர்பாகவும் இந்தக்குழு ஆராயும்.

இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட முனையும் இந்தக்குழு, அதன் பணிகளை நான்கு மாதங்களுக்குள் நிறைவு செய்துகொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ள பேச்சாளர் நெசிர்கி, தேவையேற்படின் இந்தக்குழுவின் காலம் நீடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்படவேண்டுமென்ற நோக்கில், பான் கீ மூனின் இந்த நிபுணர் குழு தமது பங்களிப்பை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பாக விசாரணை செய்யவேண்டியது இலங்கையின் பொறுப்பு என்பதே பான் கீ மூனின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்த நிபுணர் குழுவின் பணிகளுக்கான நிதி, பான் கீ மூனின் உடனடி தேவைகளுக்கான நிதியில் இருந்து பெறப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பான் கீ மூனின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, அரசாங்கக் குழுவினர் பகிரங்கமாகக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக