9 ஏப்ரல், 2010

கிர்கிஸ்தானில் பெரும் புரட்சி; ஜனாதிபதி நாட்டைவிட்டு ஓட்டம் உள்துறை அமைச்சர் அடித்துக் கொலை

கிர்கிஸ்தானில் எதிர்க்கட்சிகள் பெரும் புரட்சி நடத்தி ஆட்சியைப் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி குர்மான்பெக் பாகியேவ் நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற கலவரத்தில் 100 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் சோவியத் யூனியன் நாடான கிர்கிஸ்தானின் ஜனாதிபதியாக உள்ள பாகியேவ், சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு கட்சிகளைத் திரட்டி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி ஆட்சியைக் கைப்பற்றியிருந்தார். தற்போது அவரது ஆட்சியும் அதே போன்ற ஒருபுரட்சி போராட்டத்தால் பறிபோயுள்ளது. நேற்றுக் காலை தலைநகர் பிஷ்கெக்கில் பெரும் கலவரம் வெடித்தது. பல ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு அரசு அலுவலகங்களை சூறையாடினர்.

நாடாளுமன்றம், அரசுக் கட்டிடங்கள், அலுவலகங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். பொலிஸார் நடத்திய கண்ணீர்ப் புகை வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்ததாகத் தகவல் கள் தெரிவிக்கின்றன. இந்தக் கலவரத்தில் கிர்கிஸ்தான் உள்துறை அமைச்சர் அடித்துக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜனாதிபதி பாகியேவ் தப்பி ஓடி விட்டார்.

அவர் அண்டை நாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.

இதனிடையே தலைநகர் பிஷ்கெக் உட்பட நாடு முழுவதும் நடந்த கலவரத்தில் இதுவரை 100 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அரசு கட்டடங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி உள்ளிட்டவை எதிர்க்கட்சியினரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் புரட்சிக்கு நாடு முழுவதும் மலிந்து விட்ட ஊழலே காரணம் என்று கூறப்பட்டாலும் ரஷ்யாதான் அரசுக்கு எதிராக கலகத்தை தூண்டி விட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ரஷ்யா அதனை மறுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக