2 மார்ச், 2010

நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி வாகை சூடுவோம்: ராஜபட்ச


வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்களது கூட்டணி எளிதாக வெற்றி வாகை சூடி நிலையான அரசை அமைக்கும் என்றார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச.
இலங்கையில் ஏப்ரல் 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கொழும்பில் திங்கள்கிழமை தனது கூட்டணி கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகையில் ராஜபட்ச இவ்விதம் தெரிவித்ததாக அந்நாட்டு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும் அவர் கூறியதாவது: இலங்கையில் நமது கூட்டணி மீது மக்கள் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளனர். நம்மால்தான் அவர்களுக்கு நல்லாட்சியை வழங்க முடியும் என்று உறுதியாக நினைக்கிறார்கள். இதை, 1994-ல் இருந்து தொடர்ந்து நமக்கு ஆதரவு அளித்து ஆட்சிப்பீடத்தில் அமரவைத்துள்ளதன் மூலம் அறியலாம்.
நாமும் அவர்களது நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்கிறோம். நாட்டில் எந்தளவுக்கு ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியுமோ அந்தளவுக்கு நிலைநிறுத்தியுள்ளோம். ஜனநாயக மரபை மீறி நாம் எப்போதும் நடந்து கொண்டதில்லை. ஜனநாயகம் தவிர்த்து எதன் மீதும் நாம் நம்பிக்கை கொண்டதில்லை.
மக்களின் கருத்துகளுக்கும், முடிவுகளுக்கும் மதிப்பளிக்கும் விதமாக இதுவரை தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்தியுள்ளோம். வரும் காலத்திலும் இதில் மாற்றம் இருக்காது. இதை மக்களும் அறிவார்கள். இதனால்தான் நம் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
இதுவரை நமக்கு கிடைத்த வெற்றியால் நாம் திருப்தி அடைந்திடக்கூடாது. நம்மிடையான உத்வேகம் குறைந்திடக்கூடாது. நாம் தொடர்ந்து மக்கள் மத்தியில் நம்பிக்கையுடன் நடந்து கொண்டு அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். தற்போது எதிர்நோக்கியுள்ள நாடாளுமன்றத் தேர்தலே முக்கியம். அதில் அமோக வெற்றி பெறுவதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இந்தக் குறிக்கோளை நேர்மையான முறையில் அடைய முயற்சிக்க வேண்டும். மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்ளக் கூடாது. அவர்களுக்கு எவ்விதத்திலும் நெருக்கடி அளிக்கக்கூடாது. நமது கூட்டணி கட்சிகளை சேர்ந்த யாரேனும் அப்படி நடப்பதாகத் தெரியவந்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜபட்ச தெரிவித்ததாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக