12 மார்ச், 2010

சமூக விரோதிகளுக்கு பதுளை மாவட்டம் நிச்சயம் பாடம் புகட்டும் : இதொகா

"இந்நாட்டில் எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் அதனோடு இணைந்து மலையக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் மேம்படுத்த வேண்டும் என்பதே இ.தொ.காவின் இலட்சியம்.

இந்த அடிப்படையில் தான் மறைந்த பெருந்தலைவர், மலையகத் தந்தை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவ்வப்போது ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களுடன் சேர்ந்து இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்" என இ.தொ.கா ஊடக பிரிவு, நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம் குறித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

"இந்த அடிசுவட்டை மேலும் கட்டியெழுப்புவதற்காகவே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் எமது பயணத்தைத் தொடர்ந்து வருகின்றோம்.

பதுளை மாவட்டத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நமது மக்கள் இதை நன்கு உணர்வார்கள். நாம் மென்மேலும் பெற வேண்டிய இன்னும் பல அடிப்படை உரிமைகளையும் சலுகைகளையும் இன்னும் பிற வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. எமது கட்டுக்கோப்பான ஐக்கியப்பாட்டின் மூலமாகவே இவற்றை எம்மால் அடைய முடியும்.

அரசாங்கத்தில் நாம் இணைந்திருக்கின்றோம் எமது குரலைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் எமக்குண்டு அதனால் மாகாண சபைகளிலும், பிரதேச சபைகளிலும், தேர்தல் தொகுதிகளிலும் எமது மக்களின் கட்டுக்கோப்பைத் தொடர்ந்து நாம் பாதுகாக்க வேண்டும்.

இதன் பொருட்டே பதுளை மாவட்டத்தில் இ.தொ.கா தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிடுகிறது. எமது முயற்சியை தவிடுபொடியாக்க சில தீயசக்திகள் திட்டமிட்டு வருகின்றன. அபாண்டமான பொய்களையும், சூழ்ச்சிகளையும், தந்திரோபாயங்களையும் கட்டவிழ்த்து, எம்மிடையே கலவரங்களை உண்டுபண்ணி சுயலாபம் தேட இச்சக்திகள் முனைகின்றன.

எனவே எம் மக்கள் எதிர்வரும் தேர்தலில் இவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று நம்பிக்கை எமக்குண்டு. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தீய சக்திகளுக்குப் பாடம் புகட்டுவோம்."

இவ்வாறு இதொகா ஊடக பிரிவு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது. _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக