12 மார்ச், 2010

பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.வின் வெற்றி நிச்சயம்:சுசில் பிரேம் ஜயந்த

நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு நிச்சயமாக வெற்றிபெறும். இது பற்றி எமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. எமது நோக்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் பல்கலைக்கழக சமூகத்தினரை சந்தித்து உரையாடியபோதே அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்.

தேர்தலின் பின்னர் பெரும்பான்மை பலத்துடன் உருவாக்கப்படும் ஐ.ம.சு. முன்னணி அரசின் கீழ் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் செய்யப்படுவதுடன் அமைச்சுக்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போது 80ஆக இருக்கும் அனைத்து அமைச்சுக்களும் ஒருங்கிணைக்கப்பட்டு சுமார் 35 ஆகக் குறைக்கப்படும்.

உதாரணமாக கல்வித் துறையில் மூன்று அமைச்சுக்கள் வெவ்வேறு துறைகளுக்கு உண்டு. இனிவரும் அரசின் கீழ் பலம்வாய்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரே அமைச்சின் கீழ் கல்வித் துறை சார்ந்த அனைத்துப் பிரிவுகளும் உள்ளடங்கும் விதத்தில் நியமிக்கப்படும். அத்துடன் மூன்று பிரதி அமைச்சுப் பொறுப்புக்களும் வழங்கப்படலாம் என்றும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் இப்போதே தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொடுக்க வேண்டாம் எனக் கூறுகிறார்.

150 ஆசனங்களைக் கொடுக் வேண்டாம் என்கிறார். அதாவது 149 ஆசனங்களை வழங்குமாறு தானே கூறுகிறார்? இதனூடாக எதிர்க்கட்சித் தலைவர் தோல்வியை இப்போதே ஒப்புக்கொண்டிருக்கிறாரா?" என அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக