12 மார்ச், 2010

பான் கீ மூனின் செயற்பாட்டுக்கு அணிசேரா இயக்கம் கண்டனம்




இலங்கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக தமக்கு அறிவுறுத்துவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுத்து வரும் நடவடிக்கையை அணி சாரா இயக்கம் கண்டித்துள்ளது.

நியூயோர்க்கில் உள்ள அணிசேரா இயக்க கூட்டிணைப்பு பணியகத்தின் தலைமைத்துவம் இந்த விடயம் தொடர்பாக கடிதம் ஒன்றை ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த கடிதத்திலேயே தனது கண்டனத்தை அணிசேரா இயக்கம் தெரிவித்துள்ளது அவ்வாறான நிபுணர்கள் குழுவை நியமிக்கும் விடயம் இலங்கையில் உள்ள நிலையை கருத்திற் கொள்ளாமலும் இலங்கை அரசுடன் கலந்தாலோசிக்காமலும் எடுக்கப்படுவதாக அணி சாரா இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட விடயம் தன்னிச்சையாக விசாரிப்பதற்காக உள்நாட்டிலேயே குழுவொன்றை நியமிக்கும் தனது நோக்கத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட உரிமையில்லை என்று அணி சாரா இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில குறிப்பிட்ட நாடுகளை மட்டும் இலக்கு வைத்து செயற்படுவது ஐ.நா. அமைப்பின் ஸ்தாபக கொள்கை மற்றும் அதன் சாசனத்துக்கு முரணானது என்று அணிசாரா இயக்கத்தின் கூட்டிணைப்பு பணியகம் கூறியுள்ளது.

ஐ.நா. செயலாளர் நாயகத்தின் இந்த நடவடிக்கையானது இலங்கையில் தற்போது இடம்பெறும் ஒருங்கிணைப்பை பலப்படுத்தும் முயற்சிகள் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு நன்மையை விட தீமையையே ஏற்படுத்தக் கூடும். எனவே இலங்கை அதன் உள்நாட்டு நடைமுறையை பூரணப்படுத்திக் கொள்ள அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அணி சாரா இயக்கம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக