12 மார்ச், 2010

புனித அந்தோனியாரின் திருப்பண்டம் மட்டக்களப்பு வருகை

இத்தாலி நாட்டின் பாதுவை நகரில் இருந்து கோடி அற்புதரும், வேத நூல் மறை வல்லுனருமான புனித அந்தோனியரின் திருப்பண்டம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட இத்திருப்பண்டம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை வரை மக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு பின் புதன்கிழமை காலி நகருக்கு எடுதுச் செல்லப்பட்டது.

பின் அங்கிருந்து இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நகருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.இத்திருப்பண்ட பேழையை மட்டக்களப்பு திருமலை மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு கிங்ஸ்லி சுவாம்பிள்ளையும் துணை ஆயர் கலாநிதி பொன்னையா யோசப்பும் பொறுப்பேற்றனர்.

தற்போது இத்திருப்பண்டம் மட்டக்களப்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் மக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.இதனைத் தரிசிப்பதற்காக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அந்தோனியாரின் இத்திருப்பண்டம் இன்று இரவு 7.00 மணிக்கு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் மக்கள் தரிசனத்துக்காக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை இத்திருப்பண்டம் மன்னாருக்குக் கொண்டு செல்ல ஏற்பாடகியுள்ளது.மன்னார் தள்ளாடியிலிருந்து விசேட பவனியுடன் காலை 8.00 மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்குக் கொண்டு வரப்படவுள்ளது.

காலை 8.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மக்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு பின் அன்று மாலை வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

779 ஆண்டுகள் புனித அந்தோனியாரின் உடலில் அழியாத பாகமாக காணப்பட்ட 'திருப்பண்டமான' இதயத்தைத் தரிசித்து இறையாசீர் பெற அனைவரும் புனிதரின் அடியார்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக