28 பிப்ரவரி, 2010

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து நிறைவுசெய்யப்பட்டதைச் தொடர்ந்து அரசியல்கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (27) அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியில் மத வழிபாடுகளுடன் ஆரம்பமானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சிரேஷ்ட அமைச்சர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

எதிர்வரும் ஏப்ரல் எட்டாந்திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 36 அரசியல் கட்சிகளும் 301 சுயேச்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன.

இருந்தபோதிலும், பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளுக்கிடையில் ஒரு மும்முனைப் போட்டியாக இந்தத் தேர்தல் களம் அமைந்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தமது தேர்தல் பிரசாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

எனினும், கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் பிரசாரப் பதாகைகள், சுவரொட்டிகளை அகற்றும் பணிகளைத் தாம் நேற்றிலிருந்து ஆரம்பித்துவிட்டதாக தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். இதற்கென விசேட பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சுவரொட்டி அகற்றும் பணிக்காக 1300 ஊழியர்களை சேர்த்துக் கொண்டுள்ளதாகவும் காமினி நவரட்ண கூறினார். பொலிஸார் தேர்தல் கடமைகளை ஆற்றுவதற்காக தேர்தல்கள் செயலகம் இரண்டு கோடியே 20 இலட்சம் ரூபாய் நிதியைப் பெற்றுக் கொடுத்துள்ளது. சகல மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தும் நட வடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதுமுள்ள 40 பொலிஸ் வலயங்களிலும் 413 பொலிஸ் நிலையங்களினூடாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தேர்தலுக்கான பொலிஸ் ஊடக பேச்சாளர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது வன்முறைகள் தலைதூக்காதவாறு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஒவ்வொரு மாவட்டங்களிலுமுள்ள பொலிஸ் நிலையங்களின் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் கண்காணிப்புக்கென சகல பொலிஸ் நிலையங்களிலும் தனியான பிரிவொன்று இயங்க ஆரம்பித்துள்ளது.

வீதித் தடைகள் ஏற்படுத்துதல், திடீர் சோதனைச் சாவடிகள் ஊடாக தேர்தல் நடவடிக்கைளில் ஈடுபடல், கார், மோட் டார் சைக்கிள், சைக்கிள்கள் மூலமான பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

நேற்று முதல் அரசியல் கட்சிகளினாலும், சுயேச்சைக் குழுக்களினாலும் செய்துவரும் பிரசார நடவடிக்கைகளின் போது ஒட்டப்படும் சுவரொட்டிகள், கட்டவுட்டுகள் பெனர்கள் தேர்தல் சட்ட திட்டங்களின்படி அகற்றப்படல் வேண்டும்.

இதற்கமைய தேர்தல் திணைக்களம் பொலிஸ் தலைமையகத்துக்கு இரண்டு கோடியே 20 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

அத்துடன் இந்த நடவடிக்கைகளை நாடுமுழுவதும் மேற்கொள்வதற்காக 1300 தொழிலாளர்களை கடமைக்கு சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலின்போது பாதுகாப்பு கடமைகளுக்காக 68,800 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் விஞ்ஞாபனங்கள் தயாரிப்பு

இதேவேளை, அரசியல் கட்சிகள் தத்தமது தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தயாரிப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மஹிந்த சிந்தனை செயற்திட்டத்தின் இரண்டாம் பாகமான எதிர்கால நோக்கினை அடிப்படையாக வைத்தே மக்கள் ஆணையைப் பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முன்னணியில் போட்டியிடும் ஏனைய கூட்டுக் கட்சிகளும் தமது கொள்கை விளக்கங்களைத் தனியாகவும் தெரிவித்துவருகின்றன.

ஐக்கிய தேசிய முன்னணி, ஜனநாயக தேசிய கூட்டணி (ஜே.வி.பி.), தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், புளொட் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விரைவில் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக