28 பிப்ரவரி, 2010

எதிர்க்கட்சிகளின் பிளவு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு வழிவகுக்கலாம்- அரசியல் விமசகர்கள் கருத்து



ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த வெல்வது இலகுவானதல்ல என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் அதிகளவு சுயேச்சை குழுக்கள் போட்டியிடுவதன் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

தமக்கு சாதகமற்ற பகுதிகளில் அதிகளவில் சுயேச்சைக் குழுக்களை போட்டியிட வைத்து எதிரணியின் வாக்குகளை சிதறடிப்பதன் மூலம் அங்கு வெற்றியினை பெறுவதற்கு அரசாங்கம் முயல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிகளுக்குள் தற்போது பிளவுகள் தோன்றியுள்ளன. பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் இந்தப் பிரிவினை மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுகூலங்களை எற்படுத்தலாம். அவர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்பார்க்கிறார்.

இலங்கையின் அரசியல் சட்டங்களை மாற்றுவதற்கும், புதியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும், அதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை பெறவும் அரசுக்கு இந்த பெரும்பான்மை அவசியம்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன ஆகிய இரு கட்சிகளும் பிரதான எதிர்க்கட்சிகள். அவை இரண்டும் தமக்குள் உள்ள வேற்றுமைகளை விடுத்து அரச தலைவர் தேர்தலில் பொன்சேகாவை ஆதரித்திருந்தன. எனினும் அவர் 18 இலட்சம் வாக்குகளால் தோல்வி கண்டிருந்தார். மஹிந்த முறைகேடான வெற்றியை பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் பிரிவுக்கு கொள்கைகளே காரணம் என ஐ.தே.கவின் கொழும்பு மாவட்டத் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஜனாதிபதி மஹிந்த வெல்வது இலகுவானதல்ல என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் எதிர்க்கட்சிகளின் பிரிவினைகள் அவருக்கு அனுகூலமாக அமையலாம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இலங்கையின் 40 பில்லியன் டொலர் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு உறுதியான நாடாளுமன்றம் அவசியமானது.

இதேவேளை, இலங்கைக்கான 2.6 பில்லியன் டொலர் உதவித் தொகையை தாமதப்படுத்தப் போவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரம் நாடாளுமன்ற தேர்தல் நிறைவுபெற்று புதிய வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரையிலும் அதனை தாமதப்படுத்தப் போவதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக