28 ஏப்ரல், 2011

அறிக்கை குறித்து விவாதிக்க பாராளுமன்றத்தை கூட்டவும்: திருமாவளவன்

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்கு பாராளுமன்றக் கூட்டத் தொடரை உடனடியாக கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பியுமான தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, படுகொலைகளை உறுதிப்படுத்தி ஐ.நா. அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் இலங்கை அரசு மீது சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இந்திய அரசு ஐ.நா. மன்றத்தை வலியுறுத்த வேண்டும். ஐ.நா. அறிக்கையை விவாதிப்பதற்காக பாராளுமன்றக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதை ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. இலங்கை அரசாங்கம் ஈவிரக்கமற்ற முறையில் தமிழர்களைக் கொன்றதையும், உலக நாடுகளை ஏமாற்றியதையும் செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. மன்றம் முதலான சர்வதேச அமைப்புகளையும் அங்கே செயல்பட விடாமல் தடுத்ததையும் ஐ.நா. அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

போர் முடிந்ததற்குப் பிறகும் இலங்கை அரசு ஏராளமான தமிழர்களைப் படுகொலை செய்து வருவதையும் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தி வருவதையும் ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகவல்கள் வெளியுலகைச் சென்றடையாதவாறு ஊடகவியலாளர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் வெள்ளை வேன்களில் கடத்திக் கொலை செய்வதையும் ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

அது மட்டுமன்றி இலங்கையில் நீதித்துறை சுதந்திரமாக இயங்கவில்லை என்பதையும் தற்போது இலங்கை அரசால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் கண் துடைப்புக்காக அமைக்கப்பட்ட ஓர் அமைப்புதான் என்பதனையும் ஐ.நா. அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகளை விசாரித்து அதற்குக் காரணமான ராஜபக்ஷ உள்ளிட்டவர்களைத் தண்டிப்பதற்கு சர்வதேச அளவிலான நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் ஐ.நா. அறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது. அங்கு தமிழ் மக்கள் சமத்துவத்தோடு வாழ்வதற்குத் தேவையான அரசியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை ஐ.நா. அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

நாம் இதுவரையில் கூறி வந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவைதான் என்பதை ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இந்திய அரசும், இங்குள்ள அரசியல் கட்சிகளும் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் உறுதியாகக் குரல் எழுப்பி ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் காப்பாற்றிட முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

1. இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றங்கள்தான் என ஐ.நா. அறிக்கை கூறியிருக்கிறது. அவை போர்க் குற்றங்கள் மட்டுமல்ல. அது ஓர் இனப் படுகொலை. அங்கு கொல்லப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற காரணத்தாலேயே கொல்லப்பட்டுள்ளனர். இந்த அம்சத்தை ஐ.நா. அறிக்கை கவனத்தில் கொள்ளவில்லை. எனவே இலங்கையில் நடந்தவற்றை போர்க்குற்றங்கள் (ஙிச்ணூ இணிட்ஞுண்) என்று மட்டும் பார்க்காமல் அவற்றை ஓர் இனப் படுகொலையாகப் பார்க்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

2. இலங்கை இறுதி யுத்தத்தின்போது சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கை அரசுக்கு உதவியதாக செய்திகள் வெளிவந்தன. ஐ.நா. அமைப்பைச் சார்ந்த சில அதிகாரிகளும் கூட உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இத்தகைய குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐ.நா. மனித உரிமை அமைப்பு தனியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

3. இலங்கை அரசின் மீது போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என முயற்சிகள் எடுக்கப்பட்டபோது கியூபா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட கம்யூனிஸ நாடுகள்தான் அம்முயற்சியைத் தடுத்து இலங்கையை கைப்பற்றின. கம்யூனிஸ நாடுகள் என்ற போர்வையில் தமிழினப் படுகொலையை ஊக்குவித்த இந்நாடுகளின் நோக்கம் அம்பலப்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் மேற்கண்ட நாடுகளோடு அரசியல் ரீதியாக எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ள மாட்டோம் எனப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

4. பாதுகாப்புக் காரணம் என்று சொல்லி சர்வதேச அரங்குகளில் இலங்கையை இந்தியா ஆதரித்து வருகிறது. இனிமேல் அந்த நிலை தொடரக்கூடாது. இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையை மறு ஆய்வு செய்ய தமிழக அரசோடும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளோடும் இந்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் இந்திய அரசை வலியுறுத்துகிறது.

5. ஐ.நா. அறிக்கை ஈழத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல தமிழ் இனம் முழுமைக்குமே ஒரு முக்கிய அறிக்கையாகும். அது மட்டுமல்லாமல் தெற்காசியாவில் முக்கியத்துவத்தோடு திகழும் இந்தியாவுக்கும் இந்த அறிக்கை முக்கியமானதாகும். எனவே இந்த அறிக்கையை விவாதிப்பதற்காக உடனடியாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக