4 ஜனவரி, 2011

வடக்கு, கிழக்கு மாகாணம் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்ப துரித நடவடிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கான துரித நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

தமிழில் பணியாற்றக்கூடிய அதிகாரிகளை இவ்விரு மாகாணங்களிலும் நியமிக்கும் வகையில் தனியான போட்டிப் பரீட்சைகளை நடத்தி அப்பிரதேசங்களிலிருந்தே அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான வெற்றிடங்களைத் துரிதமாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிர்வாக சேவைக்கான பொது போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு பெரும்பாலானோர் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் வடக்கு கிழக்கு மக்கள் நலன் கருதி தமிழ் மொழியில் பணியாற்றக்கூடியவர்களையே அங்கு நியமிக்க வேண்டுமென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இத்தீர்மானத்தை செயற்படுத்தும் வகையில் தமிழில் பணியாற்றக்கூடிய நிர்வாக சேவை அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கென தனிப் போட்டிப் பரீட்சையொன்றை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கிலிருந்தே இவர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் இப்போட்டிப் பரீட்சை நடத்தப்படுமெனவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக