3 ஜனவரி, 2011

உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பிலும் போட்டியிடுவது குறித்து ஆராய்கின்றோம்: த.தே.கூ


எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பிலும் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து வருகின்றது. இது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் கூட்டமைப்பு போட்டியிடும். அதுமட்டுமல்லாது கொழும்பிலும் போட்டியிடுவது குறித்து தற்போது ஆராய்ந்து வருகின்றோம். இது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும்.

அரசாங்கம் எந்த வேளையில் தேர்தலை நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்று தெரிவித்தார்.

இதேவேளை உள்ளூராட்சி தேர்தலின் போது மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கல்முனை மாநகர சபைகள் உட்பட அனைத்து சபைகளிலும் கூட்டமைப்பு போட்டியிடும். தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்தும் சபைகளுக்கான மேயர், தலைவர், வேட்பாளர்கள் நியமனம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து 4ஆம் திகதி கூடும் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் ஆராயப்படுமென்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக