3 ஜனவரி, 2011

கமெரா துல்லியமான படப்பிடிப்பு 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடையாளம் காணப்பட்டன






வீதி ஒழுங்கு விதி முறைகளை மீறிய 200ற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்த இரண்டு நாட்களுக்குள் சி.சி.ரி.வி கெமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட சகல வாகன உரிமையாளர்களுக்கும் தண்டப் பத்திரம் அனுப்பி வைக்கப்படும் என்று மேல் மாகாண போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக்க விஜயதிலக்க தெரிவித்தார்.

அவ்வாறு தண்டப் பணத்தை கட்டுவதற்கு தவறுபவர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சகல நடவடிக்கைகளையும் துல்லியமாக படம்பிடிக்கும் (சி.சி.ரி.வி.) கெமராக்களின் ஊடாக கொழும்பு நகரை முழுமையாக கண்காணிக்கும் பணிகள் டிசம்பர் 29ம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு உதவி ஒத்துழைப்புக்களும், வாகன நெரிசல்களை தவிர்த்தல் மற்றும் வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறும் செயல்கள் என்பன மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். சகல நடவடிக்கைகளையும் மிகவும் துல்லியமாக படம்பிடிக்கும் சி.சி.ரி.வி. கெமராக்கள் மூலம் பெறப்படும் காட்சிகள் நீதிமன்ற சாட்சிகளாகப் பயன்படுத்தப்படும் என்று பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இந்தக் கெமராக்களின் ஊடான கண்காணிப்பு மூலம் விசேடமாக விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பிச் செல்லல், கொலை, கொள்ளை, வாகன நெரிசல் போன்றவற்றை துல்லியமாக அவதானிப்புடன் கவனிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக