3 ஜனவரி, 2011

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கடல் அடி மின் கேபிள் பரிமாற்ற திட்டம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே முதன் முறையாக கடலுக்கு அடியில் மின் பரி மாற்றக் கேபிள்களை அமைக்க திட்டமிடப்பட்டு ள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் மின் பகிர்மான கேபிள்களை இந்திய மின் தொகுப்பு கழக நிறுவனமும் (பவர் கிரிட்) இலங்கை மின்சார சபையும் இணைந்து அமைக்க திட்டமிட்டுள்ளன.

இதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்.) இந்திய மின் தொகுப்புக் கழகம் இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.

இந்திய மின் தொகுப்புக் கழகத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இது பற்றி கூறியதாவது; இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் 250 முதல் 300 கி.மீ, நீளத்திற்கு மின் பரிமாற்றக் கேபிள் வயர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 50 கி.மீ. நீளம் கடலுக்கு அடியில் அமைய உள்ளது. கடலுக்கு அடியில் அமையும் கேபிள் திட்டத்தை இந்திய மின் தொகுப்புக் கழகமும் இலங்கை மின்சார வாரியமும் இணைந்து மேற்கொள்ளும்.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், இந்த திட்டப்பணிகள் 2014 ஆம் ஆண்டில் தொடங்கும், இந்த திட்டத்திற்காக 3,000 முதல் 4,000 கோடி வரை தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

12 வது ஐந்தாண்டு திட்ட காலத்தின் முடிவில் ஆயிரம் மெகா வாட் மின்சாரம் இந்த கேபிள் மூலம் பரிமாற்றம் செய்யப்படும். தமிழகத்தின் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கையின் தலை மன்னார் வரை இந்த கேபிள்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டத்திற்கான இறுதித் தடத்தை மத்திய அரசு முடிவு செய்யும். அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடலுக்கு அடியில் மின் கேபிள்கள் அமைக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த முறையை பின்பற்றி, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் கேபிள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய மின் தொகுப்புக் கழகம் ஏற்கனவே இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பூட்டான் இடையேயான திட்டம் செயல் வடிவத்தில் உள்ளது. வங்கதேசம் இடையேயான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. எனினும், இலங்கை இடையேயான திட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த திட்டம் குறித்து இ.மி.சபை தலைவர் வித்ய அமரபால கூறியதாவது, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் கடலுக்கு அடியில் மின்பரிமாற்ற கேபிள்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான திட்டப்பணிகள் விரைவில் தொடங்கும். எந்த திகதியில் தொடங்கும் என்பதை திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு அரசின் அனுமதி கிடைத்ததும் அறிவிக்கப்படும்.இவ்வாறு வித்ய அமரபால கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக