19 ஜனவரி, 2011

குடிநீர், வீண்விரயமாவதை கட்டுப்படுத்துவது மிக அவசியம்






குடிநீர் வீண்விரயமாக்கப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவது அரசின் பொறுப்பு. அந்த வகையில் குடிநீர் வழங்கலுக்காக அரசாங்கம் பெருந்தொகை நிதியை செலவிடுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.

லபுகம நீர்த்தேக்கத்தினதும், நீர் சுத்திகரிப்பு நிலையத்தினதும் 125வது வருட நிறைவின் நிமித்தம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற வைபவத்தின்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின்போது நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது. லபுகம நீர்த்தேக்கத்தையும், நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் மேம்படுத்தும் வேலைத் திட்டம் இன்று (19ம் திகதி) ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. இதற்கு ஹங்கேரிய அரசாங்கம் நிதியுதவி அளித்திருக்கின்றது.

1882ம் ஆண்டில் வக் ஓயாவை மறைத்து அணை அமைத்து லபுகம நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. என்றாலும் 1886ம் ஆண்டு முதல் குடிநீர் விநியோக நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டன. இது 1912ம் ஆண்டில் முழுமையான நீர்சுத்திகரிப்பு நிலையமாக மேம்படுத்தப்பட்டது.

லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையம் 1978ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கீழ் கொண்டு வரப்பட்டது.

லபுகம நீர்த் தேக்கமும், நீர் சுத்திகரிப்பு நிலையமும் 1985ம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அலரி மாளிகையில் இந்த நினைவு முத்திரை வெளியிடும் நிகழ்வு இடம்பெற்ற பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் ஹங்கேரிய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிகழ்வின்போது ஹங்கேரிய அரசின் செயலாளர் கலாநிதி பாலோஸ்பூ டொஸ், ஹங்கேரிய ஜனாதிபதியின் நல்வாழ்த்துக்களை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குத் தெரிவித்தார்.

இதேநேரம் கிட்டிய எதிர்காலத்தில் இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் என்று தாம் நம்புவதாகவும் ஹங்கேரிய அரசின் செயலாளர் இச்சமயம் கூறினார். இதேவேளை, இரு நாடு களுக்கிடையிலும் பல்துறைகளிலும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இச்சமயம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடக்கு- கிழக்கில் முதலிடுவதற்கான வாய்ப்பு மற்றும் அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் என்பன தொடர்பாக விரிவாகத் தெளிவுபடுத்தினார்.

உல்லாசப் பயணத்துறை தொடர்பாகவும், இரு நாடுகளுக்கிடையிலும் கலாசார ஒத்துழைப்பு மேம்பாடு குறித்தும் இப்பேச்சுவார்த்தையின்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன, ஜீவன் குமாரதுங்க, பிரதியமைச்சர்கள் கீத்தாஞ்சன குணவர்தன, நிருபமா ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக