17 டிசம்பர், 2010

பௌத்த கலாசாரத்துக்கு அடிபணிந்தே சிறுபான்மையினர் வாழவேண்டும் :தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்




சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் என்ற கொள்கைக்கு இணங்காத எந்தவொரு நபருக்கும் உள்நாட்டில் இடமில்லை என தெரிவித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், சிங்கள பௌத்த கலாசாரத்திற்கு அடிபணிந்தே ஏனைய சிறுபான்மை இனங்கள் வாழ வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில்,

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு. இங்கு சிங்கள கலாசாரமும் அதன் மொழிகளுமே தேசிய கொள்கைகளாக கருதப்பட வேண்டும். ஏனைய சிறுபான்மை இன மக்களுக்கு சுதந்திரமாக வாழ முடியும். ஆனால் தேசிய பௌத்த கொள்கைகளுக்கு உட்பட்டவர்களாகவே அவர்கள் வாழ வேண்டும். மேலும் தமிழில் தேசிய கீதத்தை பாடுவதற்கு கொண்டு வரப்பட்டுள்ள தடையானது வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டில் சில சக்திகளும் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் சிலவும் கருத்துக்களை வெளியிடுகின்றன. இவர்கள் அனைவரும் ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை எந்தவொரு நாட்டிற்கும் அஞ்சாது. ஏனென்றால் சகல அதிகாரங்களையும் கொண்ட தனி சிங்கள இராச்சியமே இலங்கையாகும்.

எனவே இந்தியா உள்ளிட்ட எந்தவொரு வெளிநாடுகளின் சவால்களுக்கும் முகம் கொடுக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். தேசிய கீதம் விடயத்தில் யாருக்கும் தலையிட உரிமை கிடையாது. அது அரசாங்கத்தின் தீர்மானமாகும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக