4 டிசம்பர், 2010

மகன் இல்லாமல் பைத்தியமாக அலைகிறேன் - நல்லிணக்க ஆணைக்குழு முன் தாயார் சாட்சியம்

காணாமல் போன எனது மகன் இல்லாமல் நான் பைத்தியம் பிடித்தவளைப் போன்று அலைகின்றேன். எனவே நான் இறக்கும் முன்னர் எனது மகனைத் தேடித்தாருங்கள் என தியாகராஜா பரமேஸ்வரி நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் மன்றாடி நின்றார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு முன்னிலையில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்றுவருகின்றன. திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்றைய அமர்வு அதன் தலைவர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்றது. ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களும் அமர்வில் கலந்துகொண்டனர். அங்கு தியாகராஜா மகேஸ்வரி தொடர்ந்து சாட்சியமளிக்கையில், 'எனது கணவர் 15 வருடங்களுக்கு முன்னர் என்னைப் பிரிந்துவிட்டார். அதன் பின்னர் நான் எனது மகனை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தேன். சொத்துக்களை விற்றேன்.

இந்நிலையில் மகன் நகைக்கடையில் வேலை செய்வதற்காக கொழும்புக்கு சென்றார். 2008 ஆம் ஆண்டு 7ஆம் மாதம் 9ஆம் திகதி அவர் காணாமல் போனார். அன்று கொழும்பில் சுற்றிவளைப்பு இடம்பெற்றதாக அறிந்தோம். எனது மகன் தொடர்பில் எந்தத் தகவலும் இல்லாமல் இருக்கின்றோம்.

காணாமல்போன எனது மகனைக் காணாமல் நான் பைத்தியம் பிடித்தவளைப் போன்று அலைகிறேன். எனவே இறக்கும் முன்னர் எனது மகனைத் தேடித் தாருங்கள்' என மன்றாடிக்கேட்டுக்கொண்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக