4 டிசம்பர், 2010

பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க சபையிலிருந்து வெளியேற்றம்

பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க நேற்று சபாநாயகரினால் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நேற்றுமுன்தினம் சபைக்குள் நடைபெற்ற அமளிதுமளி தொடர்பாக ஐ.தே.க. எம்.பி ஜயலத் ஜயவர்தனா தன்னிலை விளக்கமொன்றை சமர்ப்பித்து பேச ஆரம்பித்தார்.

அதனை குழப்பும் விதத்தில் லலித் திஸாநாயக்க சபையில் எழுந்து நின்று ஜயலத் ஜயவர்தனாவை நோக்கி கூச்சலிட்டார். அவருடன் ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பியும் எழுந்து நின்று ஒழுங்குப் பிரச்சினை எழுப்பினார்.

இந்தச் சபையில் எந்தக் கட்சியாக இருப்பினும் உறுப்பினர் ஒருவருக்கு பேசும் உரிமை இருக்கிறது. அதனை குழப்ப எவரும் முயற்சிக்க வேண்டாம் என

கூறிய சபாநாயகர் லலித் திஸாநாயக்கவை அமரச் சொன்னார். எனினும் ஆசனத்தில் அவர் அமரவில்லை. இந்த நிலையில் சபாநாயகர் லலித் திஸாநாயக்காவை சபையிலிருந்து வெளியேறச் சொன்னார். நீங்கள் வெளியேற வில்லையானால் ஒருவாரத்துக்கு உங்களை சபைக்குள் வர அனுமதிக்க மாட்டேன் என்றார்.

இதன் போது லலித் திஸாநாயக்க சபையிலிருந்து வெளியேறினார். எனினும், ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. எழுந்து நின்று கொண்டேயிருந்தார். நீங்களும் ஆசனத்தில் அமருங்கள் என சபாநாயகர் அழுத்திக் கூறினார். இதனைத் தொடர்ந்து அஸ்வர் எம்.பி. ஆசனத்தில் அமர்ந்தார். எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டும் எனவும் சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

இதன் பின்னரே ஜயலத் ஜயவர்தனா தனது விளக்க உரையை நிகழ்த்தினார். ஜயலத் ஜயவர்தனாவின் உரை முடிவடைந்தவுடன் லலித் திஸாநாயக்க சபைக்குள் வந்தமர்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக