22 டிசம்பர், 2010

பார்வையாளர்கள், காவலர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் சிறைக்குள் கைத்தொலைபேசிகளை எடுத்துச்செல்ல முற்றாக தடை


உடலுக்குள் மறைத்து எடுத்துவரப்பட்ட கைத்தொலைபேசிகள் அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன - சிறைச்சாலை ஆணையாளர்
நாட்டிலுள்ள சகல சிறைச்சாலைகளுக்கும் கையடக்கத் தொலைபேசி கொண்டு செல்வது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி. ஆர். சில்வா தினகரனுக்குத் தெரிவித்தார்.

கைதிகளைப் பார்வையிட வருபவர்கள் முதல் சிறைக் காவலர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என எவரும் கையடக்கத் தொலைபேசியைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இதனையடுத்து களுத்துறை, மாத்தறை சிறைச்சாலைகளில் கையடக்கத் தொலைபேசிப் பாவனை முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் கூறினார்.

சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசி தடை செய்யப் பட்டிருந்தாலும் சில கைதிகள் தொலைபேசியை உடலுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வருவதால் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகக் கூறிய ஆணையாளர் நாயகம் சில்வா, அண்மையில் சில கைதிகளின் உடலில் சத்திர சிகிச்சை மேற்கொண்டு கையடக்கத் தொலைபேசிகளை அகற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் தற்போது சிறைச்சாலைகளில் கையடக்கத் தொலைபேசிப் பாவனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக