22 டிசம்பர், 2010

வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களை வெல்லும்வரை மனிதாபிமான நடவடிக்கை

பயங்கரவாதம் ஏற்படுத்திய துயர் நீக்கப்படும் - ஜனாதிபதி
வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களை வெல்லும் வரை மனிதாபிமான நடவடிக் கைகள் தொடரும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளும் மனிதாபிமான நடவடிக்கைகளே என குறிப்பிட்ட ஜனாதிபதி; அப்பிரதேச மக்கள் மனதிலிருந்து பயங்கரவாதத்தின் துயர நினைவுகள் நீங்கி பிரிவினைவாத எண்ணம் இல்லாதொழியும் வரை மனிதாபிமான நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.

நாம் யுத்தம் செய்யவில்லை, அவ்வாறு யுத்தம் செய்திருந்தால் பயங்கரவாதத் தலைவர் ஒழிக்கப்பட்ட போதே அது நிறைவு பெற்றிருக்கும். நாம் மனிதாபிமான நடவடிக்கைகளையே மேற்கொண்டோம். இந்த மனிதாபிமான நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் அது தொடரும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தியதலாவ இராணுவ பயிற்சிக் கல்லூரியில் கெடட் பிரிவு உத்தியோகத்தர்களாக பயிற்சி பெற்ற 253 படை வீரர்கள் தமது பயிற்சிகளை முடித்துக் கொண்டு நேற்றைய தினம் வெளியேறினர்.

இவர்கள் தமக்கான பதவி நிலையை பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று தியதலாவ இராணுவ பயிற்சிக் கல்லூரி மைதானத்தில் பாதுகாப்பமைச்சரும் முப்படைகளின் தளபதியுமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜே. ஜயசூரிய உட்பட உயர்மட்ட படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கெடட் பிரிவின் 68, 69, 71, 68 பீ. எஸ்.சி. 18 தொண்டர் படை மற்றும் கெடட் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்களும் தமக்கான பதவி நிலையை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மேலும் உரை நிகழ்த்திய ஜனாதிபதி; தோல்வியுற்ற பயங்கரவாதிகள் இன்றும் பல சர்வதேச நாடுகளில் முகாமிட்டுள்ளனர். இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு, நிராயுதபாணியான மக்களை எமது படையினர் கொலை செய்தனர் என்று கூறப்படும் குற்றச் சாட்டே நவீன ஆயுதமாகவுள்ளது. அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை நாம் தற்போது ஆரம்பித்துள்ளோம்.

படையினர் மட்டும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இந்த நாட்டு மக்களும் பயங்கரவாதத்துக்கு எதிராக அணிதிரண்டனர். கடந்த 30 வருட காலம் அவர்கள் பயங்கரவாதத்தின் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து சளைக்காது பூரண பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.

அரசாங்கம் மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்கையில் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியது. மீண்டும் இந்த நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்க இடமளியாமையே நாம் அவர்களுக்குச் செய்யும் உயர் கெளரவமாகும்.

பயிற்சிகளை முடித்துக் கொண்டு இன்று வெளியேறும் இந்த இளைஞர்கள் நாட்டில் பயங்கரவாதம் உக்கிரமடைந்திருந்த போது பயிற்சியில் இணைந்தவர்கள். அதேபோன்று நாடு பற்றிய தீர்க்கமான சிந்தனையுடன் அவர்களது பெற்றோர்கள் தமது பிள்ளைகளை படைக்கு அனுப்பி தியாகங்களைப் புரிந்துள்ளனர்.

அவர்களுக்கு நாட்டு மக்களின் சார்பில் எனது கெளரவம் உரித்தாகட்டும்.

தியதலாவ இராணுவ பயிற்சிக் கல்லூரி வரலாற்றில் இடம்பிடித்த ஒன்றாகும். நாட்டைப் பாதுகாப்பதற்காக இக் கல்லூரி வழங்கியுள்ள பங்களிப்பு மிக உயர்வானதும் பாராட்டுக்குரியதுமாகும். இதுவரை இங்கு பயிற்சி பெற்றோர் மூன்று இராணுவத் தளபதிகளும் பாதுகாப்புச் செயலாளர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

தமது இறுதி சொட்டு இரத்தத்தையும் தாய் நாட்டுக்காக ஈந்த படைவீரர்களினால் தான் இன்று நம் நாடு உலகின் பாராட்டுக்களை பெறும் நாடாகியுள்ளது. அவர்களின் அளப்பெரிய அர்ப்பணிப்பை புதிய படை வீரர்கள் மதிக்க வேண்டும். அவர்கள் இந்த நாட்டை நேசித்தனர். நீங்களும் இந்த நாட்டை நேசிக்க வேண்டும்.

நாட்டை நேசிக்காத ஒருவர் எத்தகைய திறமைகளைக் கொண்டிருப் பினும் பயனில்லை.

பிரிவினை வாதத்தைத் தோற்கடிக்க புறப்பட்டுள்ள நீங்கள் 60களில் ஆரம்பமான பிரிவினை வாதத்தையும் 70 களில் ஆரம்பமான பயங்கர வாதத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதைபற்றிய தெளிவு உங்களுக்கு மிக அவசியம். நாட்டுக்காக மனதால் மட்டுமன்றி அறிவுத் திறனையும் உச்சளவில் நீங்கள் உபயோகிக்க வேண்டும்.

திறமைகளை வளர்த்துக் கொள்வது அவசியம். பல்வேறு விடயங்களைப் போன்று தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழியறிவும் முக்கியமானதாகும். படை வீரர்களுக்கு ஒழுக்கமே தலை சிறந்ததாகும். ஜனநாயகத்தை மதித்து செயற்படும் ஆசியாவின் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட நாடு இலங்கை யாகும். பாதுகாப்புப் படையினரிடம் காணப்பட்ட ஒழுக்கமே எமது ஜனநாயகத்தைக் கட்டிக்காக்க உதவியது.

நாட்டின் சம்பிரதாயங்கள், கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பாகும்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு நீங்கள் தயாராக வேண்டும்.

அத்துடன் பெற்றோரை மதித்து அவர்களின் எதிர்பார்ப்பையும் ஈடேற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு.

எனது முதலாவது தெரிவும் இரண்டாவது தெரிவும் மூன்றாவது தெரிவும் எனது தாய் நாடே. அதே போன்று நீங்களும் தாய்நாட்டின் மீது கெளரவமும் அன்பும் செலுத்துவது அவசியம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக