20 டிசம்பர், 2010

ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பனி; சுவீடன் - பிரிட்டன் விமான நிலையங்கள் பூட்டு பயணிகள் நிர்க்கதி: கிறிஸ்மஸ் பண்டிகை களையிழப்பு


பிரிட்டிஷ், ஜேர்மன், சுவீடன் போன்ற நாடுகளில் பெய்யும் கடுமையான பனியால் அங்கு இயல்பு நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விசேடமாக விமான சேவைகள் அனைத்தையும் இந்நாடுகள் இடைநிறுத்தியுள்ளன.

நெடுஞ்சாலைகளிலும் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால் தரைமார்க்கமான போக்குவரத்துகளும் ஸ்தம்பித்தன. பாடசாலைகள் வைத்தியசாலைகள், அரச, தனியார் அலுவலகங்கள் இயங்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் மிக விசேடமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

பிரிட்டன் தனது உள், வெளிநாட்டு விமான சேவைகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தியது. பிரிட்டனின் வட பகுதி ஸ்கொட்லாண்ட் என்பன மிகமோசமான பனிப்பொழிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இருபது சென்ரிமீற்றர் பனி பொழிந்ததாக அறிவிக்கப்பட்டது. விமான சேவைகள் திடீரென இடைநிறுத்தப்பட்டதால் அதிகளவான பயணிகள் வீதியோரங்களிலும் விமான ஓடுபாதைகளிலும் இரவுகளைக் கழித்தனர்.

பெண்கள் கர்ப்பிணித்தாய்மார்கள் சிறுவர்கள் விபரிக்கமுடியாத அசெளகரியங்களை எதிர்கொண்டனர். இது குறித்து விமான நிலைய உயரதிகாரிகளுக்கு அறிவிக்கப் பட்டபோதும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பல விளையாட்டு போட்டிகளும் ரத்துச் செய்யப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக