15 அக்டோபர், 2010

இலங்கை அகதிகள் குறித்து விவாதிக்கக் கனடாவில் குழு நியமனம்

கனடா சென்றுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் விவாதிப்பதற்காக, அந்நாட்டு வில்ஃபர்ட் லோரியா பல்கலைக்கழகம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது.

இந்தக் குழு எதிர்வரும் 18ஆம் திகதி பல்கலைக் கழகத்தில் திறந்த விவாதம் ஒன்றை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் அகதிகள் வருகை, வெளிநாட்டு நடவடிக்கை மற்றும் கனடாவின் பொறுப்பு என்ற தொனிப் பொருளில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

இதன்போது அகதிகளால் ஏற்படுகின்ற தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள், குடிவரவு சட்ட மீறல்கள், ஆட்கடத்தல்காரர்களின் நடவடிக்கைகள் என்பன குறித்து கலந்துரையாடப்படவுள்ளன. குழுவில் 5 முக்கிய நிபுணர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

கனேடிய அகதிகள் கொள்கை மற்றும் மாற்றங்கள் என்ற தொனிப்பொருளில், அரசியல்துறை பேராசிரியர் கிரிஷ் அன்டர்சன் கருத்து வெளியிடவுள்ளார்.

கனேடிய ஊடக பொறுப்புக்கள் என்பதன் கீழ் வில்ஃபர்ட் பல்கலைக் கழகத்தின் சமயக்கல்வி பேராசிரியர் அமர்நாத் அமரசிங்கம் கருத்துரை வழங்கவுள்ளார். தமிழ் காங்கிரஸின் சட்டத்தரணி கெரி ஆனந்தசாங்கரி, ரியர்சன் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் அபர்னா சுந்தர் மற்றும் எலிஸ்டர் எட்ஜர் என்ற ஐக்கிய நாடுகள் முறைமையின் பணிப்பாளர் ஆகியோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அவர்கள் இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாக அந்நாட்டு இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக