15 அக்டோபர், 2010

நல்லிணக்க ஆணைக்குழுமுன் சாட்சியமளிப்பதற்கு மூன்று மனித உரிமை அமைப்புக்கள் மறுப்பு

இலங்கை அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியம் அளிக்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை சர்வதேச மனித உரிமைக்குழுக்களான சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச நெருக்கடி விவகாரக்குழு ஆகியவை நிராகரித்துள்ளன.

இந்த ஆணைக்குழு சுயாதீனம் மற்றும் பக்கசார்பற்ற விசாரணை போன்ற விடயங்களில் சர்வதேச தரத்தில் இல்லை என்று அவை குற்றஞ்சாட்டியுள்ளன. அதனாலேயே தாம் அந்த ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க முடியாது என்று அவை மூன்றும் ஒரு கூட்டு அறிக்கையில் நிராகரித்துள்ளன.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து உள்ளூரில் விசாரித்து அதற்கு உரியவர்களை பொறுப்புக்கூற வைக்கவும், அங்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அவசியம் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் பேச்சாளர் ஒருவர், ஆனால், இந்த ஆணைக்குழு அதற்கு தேவையான விடயங்களை சரியாகக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இலங்கைப் போரில், அதிலும் குறிப்பாக அதன் இறுதி மாதங்களில் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மனித நேய மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்கள் குறித்து தமக்கு பல நம்பிக்கையான தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ள மன்னிப்புச் சபை, இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணைகள், அதிகாரங்கள், ஒட்டுமொத்தக் கொலைகள், சித்திரவதைகள் மற்றும் சிவிலியின்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் ஆகியவை உள்ளடங்கிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க போதுமானவை அல்ல என்றும் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக