25 செப்டம்பர், 2010

இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தீர்க்க நிறுவன ரீதியான ஏற்பாடு அவசியமானது முன்னாள் அமைச்சர் பேரியல் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம்

இனங்களுக்கிடையே அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு நிறுவனமய ரீதியான ஏற்பாடொன்று அவசியமானதென்று முன்னாள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்த்து அமைதியை நிலைநாட்டும் பொருட்டு இந்த அமைப்பை தேசிய ரீதியில் ஏற்படுத்த வேண்டுமென்றும் திருமதி அஷ்ரப் குறிப்பிட்டார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் அவர் நேற்று (24) பிற்பகல் சாட்சியமளித்தார்.

கொழும்பு 7, ஹோட்டன் பிளேசில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையில் இடம்பெற்ற விசாரணையில் சாட்சியமளித்த திருமதி பேரியல் அஷ்ரப், “முஸ்லிம்கள் ஏனைய இனத்தவர்களோடு சகவாழ்வுடன் வாழ தயாராக இருக்கிறார்கள். முஸ்லிம் மதத் தலைவர்களும் மெளலவிமார்களும் இதனையே வலியுறுத்துகிறார்கள்” என்று தெரிவித்ததுடன், கிழக்கில்

காணாமற்போன முஸ்லிம் இளைஞர்களைக் கண்டறிந்துகொள்வதற்கு நல்லிணக்க ஆணைக் குழு உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். கிழக்கில் கலவரத்தால் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் புலிகள் இல்லாதுபோனதன் பின்னர் திரும்பி வந்து தமது காணிகளைக் கோருகிறார்கள். எனினும் அவர்களின் காணிகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன. இவை நிவர்த்திக்கப்பட வேண்டும் என்றும் திருமதி அஷ்ரப் குறிப்பிட்டார்.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் தாம் வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பித்தபோது முஸ்லிம் என்பதால் தடுக்கப்பட்டதாகவும் ஆணைக்குழு முன்னிலையில் அளித்த சாட்சியத்தில் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக