20 ஜூலை, 2010

எம்.ரி.வி மீது தாக்குதல் மேற்கொண்டவர்களைக் கைது செய்யப் பணிப்பு

எம்.ரி.வி மீது தாக்குதல் மேற்கொண்டவர்களைக் கைது செய்ய கொழும்பு கோட்டை நீதிமன்றம் பொலிஸாருக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதியன்று கொழும்பு, பிரேபுரூக் பிளேஸில் அமைந்துள்ள எம்.ரி.வி தலைமையத்துக்குள் புகுந்த கும்பல் அவ்வலுவலகத்தைத் தாக்கிச் சேதப்படுத்தியது. இச்சம்பவத்துடன் தொடர்பான 16 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது சம்பவத்தின் சந்தேகநபர்கள் என சிரச தொலைக்காட்சி நிறுவனம் தந்துள்ள பட்டியலிலுள்ள 14 பேர் எங்கே இருக்கிறார்கள் என்ற விசாரணை இன்னமும் நடந்து வருவதாக பொலிஸார் நீதிபதிக்குத் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த நீதிபதி, குறித்த தாக்குதல் சம்பவத்தைப் படம்பிடித்த புகைப்படக்காரர்களிடம் வாக்குமூலம் பெற்று அதன் உதவியுடன் சந்தேகநபர்களை உடனே கைது செய்யும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இத்தாக்குதல் சம்பவத்தின் சான்றுகளாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் நீதிபதி பார்வையிட்டார்.

நீதிமன்ற விசாரணைக்கு இன்று சமூகமளிக்கத் தவறிய 12ஆம், மற்றும் 14ஆம் சந்தேகநபர்களைக் கைது செய்யும் படியும் நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக