18 ஜூலை, 2010

இலங்கையில் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு





இலங்கையில் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய சிறப்புப் பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை எழுதிய கடித விவரம்:

இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண்பது தொடர்பாக எனது

கருத்துகளையும், ஆலோசனைகளையும் கோரி ஜூலை 9-ம் தேதியிட்ட உங்களது கடிதம் கிடைத்தது.

இலங்கைத் தமிழர்கள் சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று நீங்கள் தெரிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாக நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டு வந்துள்ளோம். இதுதொடர்பாக இந்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுத்தபோதும், அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதும், போரினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்குவதும் இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளாகும்.

அங்கு போர் முடிந்து ஓராண்டு ஆன பிறகும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் அவர்களது வாழ்விடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக, கிளிநொச்சிக்கு சென்ற இலங்கை அதிபர் ராஜபட்சவிடம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதையும் உங்களது கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இலங்கையில் நிவாரணப் பணிகளுக்காக இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதியை பல மாதங்களுக்கு முன்னர் வழங்கியது. ஆனால், அங்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக நடைபெறாதது வருத்தமளிக்கிறது. இதன்காரணமாக, உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் முகாம்களில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் உண்மை நிலையை ராஜீய வழிமுறைகள் மூலமாகவோ அல்லது சிறப்புப் பிரதிநிதியை அனுப்பியோ ஆய்வு செய்ய வேண்டும்.

இலங்கை அரசின் மறுவாழ்வுப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், மறுகுடியமர்த்தல் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது குறித்தும் இந்தப் பிரதிநிதி ஆய்வு செய்ய வேண்டும்.

இடம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அமைதியான முறையிலும், உரிமைகளோடும் வாழ்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை திட்டமிட இது உதவும் என்று முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக