30 ஜூன், 2010

பொதுமன்னிப்பு வழங்க உதவுங்கள் : தமிழ்க் கைதிகள் பரிசுத்த பாப்பரசர். தந்தையிடம் கோரிக்கை

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமக்கு பொதுமன்னிப்புப் பெற்றுத் தர இலங்கை அரசை வலியுறுத்துமாறு பரிசுத்த பாப்பரசர் 16ஆவது ஆசீர்வாதப்பர் ஆண்டகையிடம் கடிதம் ஊடாக கோரியுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், இலங்கைக்கான கத்தோலிக்க திருச்சபையின் பேராயர், பரிசுத்த தந்தை ஆகியோரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையிலும் தமக்கு இன்னமும் நியாயம் வழங்கப்படவில்லை எனவும், தம்மை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் வலியுறுத்த வேண்டுமெனவும் பரிசுத்த பாப்பரசரிடமும், இலங்கைப் பேராயரிடமும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முதியோர், பெண்கள், குழந்தைகள் அடங்கியுள்ளனர் எனவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தாம் விடுத்த கோரிக்கைகளுக்கு இதுவரை காலமும் தமக்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பரிசுத்த தந்தை இது விடயத்தில் தலையிட்டு, தமக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக