30 ஜூன், 2010

ஐநா நிபுணர் குழுவைச் சந்திக்கத் தயார் : ஜெனரல் சரத்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு, நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகக் கருதக்கூடாது. நிபுணர் குழுவைச் சந்திக்க நான் என்றும் தயாராகவே உள்ளேன் என்று ஜெனரல் சரத் பொன்சேகா பிபிசிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் சந்தேகம் எழுந்தால் அதனை நிவர்த்திக்க சம்பந்தப்பட்ட நாடு முன்வர வேண்டியது அவசியம்.

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் முறுகல்களை ஏற்படுத்திக் கொள்ள நாம் ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது.

இலங்கைப் பிரஜை என்ற ரீதியில் இவ்வாறான விசாரணைகளுக்கு முழு ஆதரவளிக்க நான் என்றும் தயங்கப் போவதில்லை.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள நிபந்தனைகள் நியாயமானவை. அதனை உள்விவகாரத் தலையீடாகக் கருதத் தேவையில்லை" என்றார்.

அதேவேளை, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், நிபுணர்கள் குழு இலங்கை வர அனுமதி அளிக்கப்பட மாட்டாது எனவும் அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக