12 ஜூன், 2010

கிழக்கு பல்கலையின் திருமலை வளாகம்: சித்த மருத்துவ பீடத்தை மாற்றும் தீர்மானம் மறுபரிசீலனையில்

கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் அதிக காலம் இயங்கி வந்த சித்த மருத்துவ பீடத்தை அங்கிருந்து மாற்றுவதற்கு எடுத்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார துறை அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.

திருகோணமலை வளாகத்தின், கோணேசர்புரியில் அமைந்துள்ள சித்த மருத்துவ பீடத்தில் ஏறத்தாள 40 இற்கும் அதிகமான மாணவர்கள் கற்கை நெறியை இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.

மிக அண்மையில் உயர் கல்வி அமைச்சு மேற்படி பீடத்தை இங்கிருந்து மாற்றுவதற்கு தீர்மானித்தது. இதனை அடுத்து பீடத்தை மாற்ற வேண்டாம் என மாணவர்கள் எழுத்து மூல கோரிக்கை ஒன்றை உயர் கல்வி அமைச்சுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கும் விடுத்திருந்தனர்.

மாணவர்களின் கோரிக்கை தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் உயர்கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தமது அமைச்சு மேற்கொண்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதாகவும் சாதகமான முறையில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாகவும் உயர் கல்வி அமைச்சர் கிழக்கு மாகாண சுகாதாரத் துறை அமைச்சருக்கு உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக