12 ஜூன், 2010

வடக்கு-கிழக்கு இணைப்பின்றி 13 ஆவது திருத்தச் சட்டம்; இந்தியா இணக்கம் : அமைச்சர் டக்ளஸ்

வடக்கு கிழக்கு இணைப்பு இல்லாது பதின்மூன்றாவது அரசியல் அமைப்பை செயல்படுத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் அதனுடன் நட்புறவை வளர்க்கவும் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் கூடிய ஒன்றாக அமைந்துள்ளமை பெரும் வரப்பிரசாதமாகும். இது ஒரு பெரும் வெற்றிப் பயணம் என்பதே உண்மை.

மேற்கண்டவாறு பரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்;. மாவட்ட ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,

"இந்தியப் பயணத்தின் போது, பல முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து கலந்துரையாடக் கூடியதாக இருந்தது. குறிப்பாக இந்திய ஜனாதிபதி, பிரதமர், சோனியா காந்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர், வெளிநாட்டு அமைச்சர் சிவசிதம்பரம், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடக் கூடியதாக இருந்தது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் அனைத்துக் கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் ஒரு நல்ல தீர்வை ஒருமித்த குரலில் முன்வைக்க வேண்டும், ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்பதற்காக அழைப்பொன்றை விடுத்திருந்தேன். ஆனால் அதனை எவரும் பொருட்படுத்தவில்லை.

இன்று நாம் அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் கடந்து செயல்பட வேண்டும். ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் பிரச்சினை பற்றிப் பேசாது நாளாந்தப் பிரச்சினைபற்றி பேசியுள்ளார்கள். நாம் அன்று முதல் இன்று வரை அரசியல் தீர்வு பற்றியே பேசியுள்ளோம்; வலியுறுத்தியுமுள்ளோம்.

ஜனாதிபதியுடன் கைகோர்ப்பதில் முண்டியடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மக்களை எப்படி ஏமாற்றவது என்பதில் தான் முனைப்புடன் செயல்படுகின்றார்கள். எனவே இவர்கள் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு, மாகாண சபையைத் தம்வசமாக்கிச் சுகபோக வாழ்க்கை அனுபவிப்பதற்கே தயாராகின்றார்கள் எனத் தோன்றுகின்றது.

இந்தியாவில் நாம் கலந்துரையாடிய அனைத்து தரப்பினரையும் இங்கு வரும்படி நானும் ஜனாதிபதியும் அழைப்பு விடுத்துள்ளோம். இலங்கையில் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு அவசியம் என்பதையே அவர்கள் அனைவரும் வலியுறுத்துகின்றனர்.

மீள் குடியேற்றம் வாழ்வாதாரத் திட்டங்கள் சம்பந்தமாக ஏற்கனவே இங்கு வருகை தந்த கனிமொழி உட்பட பலருடனும் கலந்துரையாடியுள்ளோம். அவர்களும் திருப்தி அடைந்துள்ளனர். இல்லாத ஒன்றுக்காகக் காத்துக் கிடப்பதைவிட, கிடைப்பதைக் கொண்டு இரண்டாம் கட்டத்திற்கு நகர்வதே சிறப்பு.

தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. உண்மை நிலைமையைக் குறிப்பாக, கண்ணிவெடிகளின் அபாயம் குறித்து விவரித்துள்ளோம். இந்தியக் கண்ணிவெடி அகற்றும் குழுவினரும் இலங்கையில் இருப்பதனால் உண்மை நிலையை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

வட பகுதியில் அழிக்கப்பட்ட வீடுகளை எனது தலைமையில் நிர்மாணிப்பதற்காக ஆயிரம் கோடி ரூபாவை வழங்குவதற்கு இந்தியா தயாராகவுள்ளது. இருபது வருட கடன் அடிப்படையில் மேலும் ஆயிரம் கோடி அமெ. டொலர்களை ரயில்பாதை, மின்சாரம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

என் மீது களங்கம் கற்பிப்பதற்காகவே இந்தியாவில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டது.

தற்போதும் கூட இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ஆனால் நான் அங்கு இல்லாத நிலையில், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடும். எந்த வழக்கையும் சந்திக்க நான் தயாராகவே உள்ளேன்" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக