12 ஜூன், 2010

காங்கேசன் சீமெந்து தொழிற்சாலை மீள் உற்பத்தி முதலீடுக்கு ஆஸி. உதவும் அமைச்சர் றிஷாடிடம் உயர்ஸ்தானிகர் உறுதி

யுத்தத்தால் அழிந்துபோன காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் மீள் உற்பத்திக்கான முதலீடுகளை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது பங்களிப்பை செய்யவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய நாட்டின் உயர் ஸ்தானிகர் கெதி க்ளுமன் தெரிவித்துள்ளார்.

கைத்தொழில், வணிக அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் வெள்ளிக்கிழமை சந்தித்தபோதே, உயர் ஸ்தானிகர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தற்போது இலங்கைக்கும், அவுஸ்திரேலியாவுக்குமிடையில் காணப்படும் வர்த்தக செயற்பாடுகளை வலுப்படுத்திக்கொள்ளவும், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்துறையை மேலும் விரிவுபடுத்திக்கொள்வது குறித்தும் இச்சந்திப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மின்வலு, கல்வி துறைகளில், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உயர் ஸ்தானிகர், அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் சுட்டிக்காட்டினார்.

தற்போது இலங்கையில் காணப் படும் புதிய முதலீட்டு துறைகள் குறித்து அறிவுறுத்திய அமைச்சர், வடக்கு, கிழக்கு பகுதிகளில் முதலீட்டு ஊக்குவிப்புக்களுக்கான சந்தர்ப்பம் அதிகமாகவுள்ளதால், அவுஸ்திரேலியா வடக்கு, கிழக்கு பகுதிகளில் புதிய கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிப்பதற்கான முனைப்பை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரிடத்தில் விடுத்த வேண்டுகோளை, தாம் அது குறித்த கவனத்தை செலுத்துவதாக உயர் ஸ்தானிகர் உறுதியளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக