2 மே, 2010

நாட்டின் அபிவிருத்தியில் எதிரணியினர் பேதங்களை மறந்து அரசுடன் கைகோர்க்க வேண்டும்:ஜனாதிபதி



எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் அவற்றுக்கு சளைக்காது ஈடுகொடுத்து நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லுவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

இந்த நாட்டை கட்டியெழுப்பவும், அபிவிருத்தி செய்யவுமென எதிர்க்கட்சிகள் பேதங்களை மறந்து அரசாங்கத்துடன் கைகோர்த்து செயற்பட முன்வரவேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் ‘வேலைத் தளத்திற்குச் சக்தி, தொழிற்சாலைக்குப் பலம், தாய் மண்ணுக்கு சமாதானம்' என்ற தொனிப் பொருளில் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"இன்று தொழிலாளர் தினத்தை நாம் பெருமையுடனும், கௌரவமாகவும் கொண்டாடுகின்றோம். முப்பது வருட காலப் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதன் பலனே இது. யுத்தம் நிலவிய காலத்தில் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இதனை நாமறிவோம்.

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து இந்தப் பாரிய வெற்றியைப் பெற அடித்தளமிட்டவர்கள் தொழிலாளர்கள் தான். மனிதாபிமான இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட சமயத்தில் வேலைத் தளத்தில் என்ன தான் பிரச்சினைகள் இருந்த போதிலும் அவற்றைப் பேசித் தீர்த்துக்கொள்வதற்குத் தொழிலாளர்கள் பெரிதும் ஒத்துழைப்பு நல்கினார்கள். அரசாங்கம் அவர்களுக்கு உரிய சந்தர்ப்பங்களில் சம்பள உயர்வுகளையும் வழங்கியது.

கடந்த கால ஆட்சியாளர்கள் அரசாங்க நிறுவனங்களில் தொழிலாளர்களை குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு உடன்படிக்கை மூலம் இணங்கி இருந்தார்கள். அப்படி இருந்தும் நாம் பதவிக்கு வந்ததும் அதனைச் செய்யவில்லை. அரசாங்கத் துறைக்கு ஆட்சேர்ப்பு செய்து அரச துறையை வலுப்படுத்தினோம். அரச சொத்துக்கள் எதனையும் நாம் தனியார் மயப்படுத்தவில்லை.

உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் லட்சக் கணக்கானோர் தொழில்களை இழந்தனர். வங்கிகள் வீழ்ச்சி அடைந்தன. இருந்தும், எமது எந்தவொரு வங்கியும் வீழ்ச்சி அடையவோ, எவரும் தொழில் இழக்கவோ இடமளிக்கவில்லை.

நிதி நெருக்கடிகளிலிருந்தும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் நிறுவனங்களையும் வங்கிகளையும் நாம் பாதுகாத்தோம். நாம் நீண்ட காலம் தொழிலாளர்களுடன் இணைந்து செயற்பட்டு வந்ததன் பயனாகவே இதனைச் செய்துகொள்ள முடிந்தது.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து ஐக்கியப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்தது போல் பிரிந்துள்ள உள்ளங்களை மீண்டும் ஐக்கியப்படுத்தவும் தொழிலாளர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும்.

நாட்டைப் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்வதற்கு தொழிலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அதனை நான் எதிர்பார்க்கின்றேன். பொருளாதார அபிவிருத்திப் போராட்டத்தின் வீரர்கள் தொழிலாளர்கள் தான். இதற்கு நீங்கள் முழுமையாக ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

தொழிலாளர்கள் பலம் மிக்க சக்தி கொண்டவர்கள். அவர்களால் எந்தச் சக்தியையும் இறங்கி வரச் செய்ய முடியும். அதனால் தொழிலாளர்கள் தங்கள் பலத்தை பிழையான வழியில் பயன்படுத்தி அதனை வீணடித்து விடாது பாதுகாக்க வேண்டியது தொழிற்சங்க தலைவர்களின் பொறுப்பாகும்.

நாம் ஒரே நேரத்தில் ஐந்து துறைமுகங்களை அபிவிருத்தி செய்கின்றோம். இதேபோல், உட்கட்டமைப்பு துறைகளையும் மேம்படுத்தி வருகின்றோம். இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பின்புலத்தை ஏற்படுத்த நாம் ஒருபோதும் பின்நிற்க மாட்டோம். இந்நாட்டில் அச்சம், பீதியின்றி வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துவது எமது பொறுப்பு. அமைச்சர்கள் தம்மை விடவும் நாட்டையும், நாட்டு மக்களையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதை எதிரணியினருக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன். நாட்டைக் கேலி செய்யாதீர்கள் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இந்நாட்டின் அபிவிருத்திக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தாதீர்கள் என்றும் அவர்களுக்குக் கூறுகிறேன். நாட்டு மக்கள் எமக்கு தெளிவான ஆணையை வழங்கியுள்ளார்கள். இதனை எதிரணியினர் புரிந்துகொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எம்முடன் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும்." எனத் தெரிவித்தார்.

இம்மேதினக் கூட்டத்தில் ஐந்து யோசனைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில் பிரதமர் டி. எம். ஜயரட்ண, அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன,டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேம ஜயந்த, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்த்தன, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மௌலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக