2 மே, 2010

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யும் செயற்பாடுகளை முன்னெடுப்போம்

ஊடக சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி வசதிகளை மேம் படுத்துதல், பயிற்சி நிறுவனங்களை அமைத்தல், வீடமைப்பு திட்டங்களை ஆரம்பித்தல், ஓய்வூதிய திட்ட மொன்றை நடைமுறைப் படுத்துதல் ஆகிய தேவைகள் பூரணப்படுத்தப்படும் அதேவேளை, ஊடக சுதந்திரத்தைப் போல் நாட்டின் ஒழுக்கவிழுமியங்களை பாதுகாக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது என்று ஊடக த்துறைக்கான பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா இன்றைய உலக ஊடக சுதந்திர தின செய்தி யில் குறிப்பிட்டுள்ளார். அச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது :-

1991 மே மாதம் 3ஆம் திகதி நமீபியாவில் ஆபிரிக்க அச்சு ஊடக மாநாட்டில் ‘விண்டோக்’ பிரகடனம் நிறைவேற்றப் பட்டது. அப்பிரகடனத்தின் மூலம் ஜனநாயக மற்றும் அடிப்படை மனித உரிமை சுதந்திர ஊடகமொன்றின் தேவை உணரப்பட்டதுடன், சர்வதேச மட்டத்தில் சுதந்திர, சுயாதீன மற்றும் பல்தர ஊடகமொன்றை நடத்திச் செல்வதற்கு தேவையான அக்கறை உணரப்பட்டது.

யுனெஸ்கோ அமைப்பின் 26ஆவது உச்சி மாநாட்டில் விண்டோக் பிரகடனம் நிறைவேற்றப்பட்டதுடன், அப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப் பட்டதையடுத்து சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட ஆரம்பித்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலகளாவிய மனித உரிமை பிரகடனத்தின் 19ஆவது சரத்தின் மூலம் அனைத்து மக்கள் பிரிவினருக்கும் பேச்சு சுதந்திர உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த போதும் அந்த உரிமையை உறுதிப்படுத்த முயற்சித்தே வந்துள்ளது.

30 வருட கால யுத்தத்தை முடித்து நாட்டின் சமாதானம் ஏற்படுத்தப்பட்ட பின் முதல்முறையாக இப்போதே நாம் உலக சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கிறோம். எனவே புதிய ஊடக கலாசாரத்தை ஆரம்பிப்பதற்கு உதவும் வகையில் ஊடகத் துறையுடன் தொடர்புபட்ட அனைவரும் இந்த தினத்தை உபயோகப்படுத்த உதவ வேண்டும் என்றும் பிரதி ஊடக அமைச்சர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக