2 மே, 2010

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் புளொட் தலைவரின் கருத்து-






காலத்தின் தேவை கருதி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது இன்று அவசியம் என உணரப்பட்டுள்ள நிலையில் இன்று (02-05-2010) வெளியான வீரகேசரி வாரவெளியீட்டில் ஏ.எச்.சித்தீக் காரியப்பரின் கருத்துக்களத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்களும் இவ்விடயம் தொடர்பில் புளொட்டின் நிலைப்பாட்டினைத் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுக்கக்கூடிய ஒரு சூழல் உருவானால் அது வரவேற்கத்தக்கது. அவ்வாறானதொரு ஐக்கியம் ஏற்பட்டால் அதனை நாங்கள் வரவேற்போம். எங்களது பங்களிப்பினையும் வழங்கத் தயாராகவுள்ளோம். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் நாங்கள் எவருடனும் பேசத் தயாராகவிருக்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மத்தியிலும் இதற்கு ஓர் இணக்கப்பாடு ஏற்பட்டால் அதனை வரவேற்கிறோம். ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான இறுதித் தீர்வாக 13வது திருத்தச் சட்டமூலம் இருக்கமுடியாது. அதற்கு மேலாகத்தான் இருக்கவேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்கப்படல் வேண்டும். அது ஒரு சமஷ்டி அமைப்பைக் கொண்ட தீர்வாக இருக்கவேண்டும். தமிழ் மக்கள் தாங்களே தங்கள் விடயங்களைக் கையாளக்கூடிய அதிகாரப் பகிர்வாக அது இருக்கவேண்டும். மேலும் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமென்ற விடயத்தில் ஆர்வம் காட்டாவிட்டால் அது ஒரு சாத்தியமான முடிவாக இருக்குமென நான் நம்பவில்லை. தனித்தனியே பேசுவதைவிட கூட்டுச் சேர்ந்து பேசுவது நல்லது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக