9 மே, 2010

அவசரகாலச் சட்டத்தின் சில ஒழுங்குவிதிகள் இப்போது நீக்கப்பட்டுவிட்டன.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் இந்த நீக்கங்கள் உடனடியாக நடைமுறைக்கு வந்தன.

அவசரகாலச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்திருத்தம் பொதுவாக நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கின்ற அதே வேளை தமிழ் மக்கள் சில விசேடமான நன்மைகளைப் பெறுகின்றனர்.

குடியிருப்பாளர் பற்றிய விபரங்களைப் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற 23வது ஒழுங்குவிதி இப்போது நீக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தற்காலிகமாக வாழும் தமிழ் மக்கள் பொலிஸ் பதிவு நடைமுறையினால் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்தார்கள். இப்போது எந்தச் சிரமமும் இல்லை. அதேபோல வீடுகளில் தேடுதல், வீதிச் சோதனை, ஊரடங்குச் சட்டம் என்பவை தொடர்பான ஒழுங்குவிதிகளும் நீக்கப்பட்டுள்ளன.

புலிகள் அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில் இக் கட்டுப்பாடுகளை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. புலிகள் தோற்கடிக்கப்பட்டு அவர்களின் அச்சுறுத்தல் இல்லாத நிலை இப்போது ஏற்பட்டிருப்பதால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஏ 9 பாதை போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டிருப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

யுத்தம் முடிவுக்கு வந்ததற்குப் பிந்திய இந்த நிகழ்வுகளை அரசியல் கோணத்திலிருந்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும் .

தமிழ் மக்களைச் சிரமங்களுக்கு உட்படுத்திய அவசரகாலச்சட்ட ஒழுங்குவிதிகள் நடைமுறைக்கு வருவதற்குப் புலிகளின் செயற்பாடுகளே காரணமாக இருந்தன என்பதை மேலே பார்த்தோம். அரசியல் அரங்கிலிருந்து புலிகள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஒழுங்குவிதிகளுக்கான தேவை இருக்கவில்லை. தனிநாட்டுக் கொள்கை தமிழ் மக்களுக்குப் பாதிப்பான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும்.

தமிழ் மக்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் என உரிமை கோருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளோ பங்களிப்போ இல்லாமலேயே தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கின்ற இந்த முடிவை அரசாங்கம் எடுத்திருக்கின்றது. தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படும் பட்சத்தில் அரசியல் தீர்வைப் பொறுத்தவரையில் கணிசமான முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு!

அரசியல் தீர்வு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிநாட்டு மாயையிலிருந்து இப்போது விடுபட்டிருக்குமென நம்புகின்றோம். இன்றும் அந்த மாயையில் சிறிதளவாவது ஒட்டிக்கொண்டிருப்பதென்றால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

தனிநாட்டுக் கோரிக்கை தமிழ் மக்களுக்குப் பாதகமான விளைவுகளையே தந்திருக்கின்றது. தெற்கில் முன்னர் அடங்கிப் போயிருந்த பேரினவாத சக்திகள் தலைதூக்கியமை, அதன் விளைவாக அரசியல் தீர்வு முயற்சியில் ஏற்பட்ட பின்னடைவு, தமிழ் மக்கள் கூடுதலான எண்ணிக்கையில் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயரவும் உயிரிழக்கவும் நேர்ந்தமை ஆகியவற்றைத் தனிநாட்டுக் கொள்கையின் பிரதான பாதிப்புகளாகக் கூறலாம்.

மேலும் தனிநாடு காண்பது நடைமுறைச் சாத்தியமற்றது. தனிநாட்டுக்கான போராட்டம் தமிழ் மக்களைப் பலி கொடுப்பதாகவே முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலங்கடந்தாவது இதை விளங்கிக் கொண்டு அரசியல் தீர்வுப் பாதைக்குத் திரும்பியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இப்போது கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தீர்வு பற்றிப் பேசுகின்றார்கள். அவர்கள் உண்மையிலேயே அரசியல் தீர்வை அடையும் நோக்கத்துடன் பேசியிருக்கின்றார்களா அல்லது மக்களைத் திருப்திப்படுத்தித் தங்கள் இருப்பை உறுதி செய்துகொள்ளும் நோக்கத்துடன் பேசுகின்றார்களா என்பதை அவர்களின் செயற்பாட்டிலிருந்துதான் அறிய முடியும்.

அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியையும் மற்றைய தமிழ்க் கட்சிகளையும் தமிழ் மக்களின் நலன்களுக்கு விரோதமானவர்கள் என்று முத்திரை குத்தும் முயற்சிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் முன்னுரிமை அளித்துச் செயற்படுகின்றார்கள்.

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுதான் இன்று தமிழ் மக்களின் பிரதான நலன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இந்த நலனுக்கு விரோதமாக அண்மைக்காலம் வரை செயற்பட்டது. மற்றைய எல்லாத் தமிழ்க் கட்சிகளும் அரசியல் தீர்வு என்ற லட்சியத்திலிருந்து ஒருபோதும் விலகவில்லை. இன்றைய சூழ்நிலையில் படிப்படியாகவே அரசியல் தீர்வை அடைய முடியும் என்ற யதார்த்தபூர்வமான நிலைப்பாட்டின் அடிப்படையில் அவை செயற்படுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு பற்றி இப்போது பேசுகின்ற போதிலும், ‘தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய’ என்ற அடைமொழியை முன்வைப்பது தீர்வுக்காக நடைமுறைச் சாத்தியமான வழிமுறையைப் பின்பற்றும் நோக்கம் அதற்கு இல்லையா என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது.

முழுமையான அரசியல் தீர்வுதான் தமிழ் மக்களின் அபிலாஷையைப் பூர்த்தி செய்யக் கூடியது. ஆனால் அதை உடனடியாக அடைவது சாத்தியமில்லை. உடனடியாக என்ன தீர்வு சாத்தியமோ அதை ஏற்றுக்கொண்டு முழுமையான தீர்வுக்காக முயற்சிப்பதுதான் தமிழ் மக்களின் அபிலாஷையைப் பூர்த்தி செய்வதற்கான ஆக்கபூர்வ நடைமுறை. அதைவிட்டு, தமிழ் மக்களின் அபிலாஷையைப் பூர்த்தி செய்யக் கூடிய தீர்வு ஒரே தடவையில் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுப்பது அரசியல் தீர்வு பற்றிப் பேசிக்கொண்டே அதற்குக் குழிபறிக்கும் தந்திரோபாயமாகும்.

பட்டது போதும் என்ற நிலைக்குத் தமிழ் மக்கள் வந்துவிட்டார்கள். இப்போது அவர்களின் அவசியமான தேவை இனப் பிரச்சினைக்கான தீர்வு. தங்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தீர்வைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றார்களா அல்லது அரசியல் இருப்புக்காகத் தீர்வைத் தூரத்துப் பச்சையாகக் காட்டுகின்றார்களா என்பதை மக்கள் அவதானத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

மோசமான நெருக்கடி

முன்னொரு போதும் இல்லாத அளவு மோசமான நெருக்கடிக்கு ஐக்கிய தேசியக் கட்சி இப்போது முகங்கொடுக்கின்றது. கிட்டத்தட்ட மூழ்கும் கப்பலின் நிலைக்குக் கட்சி வந்துவிட்டது எனலாம். இப்போது ஒவ்வொருவராக வெளியேற முயற்சிக்கின்றார்கள். நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள். இருவரும் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட போதிலும் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் என்பதே சட்டரீதியான நிலை. இப்போது இவர்கள் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் பாராளுமன்றத்தில் சுதந்திரமாகச் செயற்படப் போவதாக அறிவித்திருக்கின்றார்கள். இவர்களைக் கட்டுப்படுத்துவதற்கோ இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கோ இயலாத நிலையில் கட்சித் தலைமை இருக்கின்றது.

முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவுக்கு மாறாகக் கட்சியின் பாண்ளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் அவசரகாலச் சட்டத்துக்கு எதிராக வாக்களித்தார். தொடர்ச்சியாக அவ்வாறே வாக்களித்தார். கட்சித் தலைமையால் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த முன்மாதிரியை இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்பற்றுகின்றார்கள்.

அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி வாக்கெடுப்பில் பங்குபற்றாமல் சபையிலிருந்து வெளியேறியது. ஆனால் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், ஜே. ஸ்ரீரங்கா, ஏ. ஆர். எம். ஏ. காதர் ஆகியோர் வெளிநடப்புச் செய்யவில்லை. ஏ. ஆர். எம். ஏ. காதர் பிரேரணைக்கு ஆதரவாகவும் மற்றைய இருவரும் பிரேரணைக்கு எதிராகவும் வாக்களித்தார்கள். கட்சிக் கட்டுப்பாடு இந்தளவுக்குத் தேய்ந்து போனதற்குத் தலைமையின் பலவீனமே காரணம்.

விஜயகலா மகேஸ்வரன் கணவனின் அடிச்சுவட்டில் நடக்கின்றார். ஸ்ரீரங்காவின் பிரச்சினை வேறு. இரண்டு தேசியப் பட்டியல் அங்கத்துவம் தர வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது.

ஏ. ஆர். எம். ஏ. காதர் ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால முக்கியஸ்தர். இருபது வருடங்களுக்கு மேலாகப் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். தொடர்ச்சியாக மக்களால் தெரிவு செய்யப்படுமளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர். இப்போது இவர் கட்சித் தலைமை மீது மிகுந்த வெறுப்புக் கொண்டிருக்கின்றார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கட்சித் தலைவர் இவரை அழைத்துப் பேச முற்பட்டதாகவும் "நீங்கள் கூறும் எதையும் நம்புவதற்கு நான் தயாரில்லை" என்று ரணிலிடம் கூறிவிட்டு இவர் வெளியேறியதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.

அவசரகாலச் சட்ட நீடிப்புக்கு ஆதரவாக வாக்களித்ததற்குக் கட்சித்தலைமை காதர் ஹாஜியாரிடம் விளக்கம் கேட்டிருக்கின்றது. அதே நேரம், கட்சியின் முடிவுக்கு மாறாக அவசரகாலச் சட்ட நீடிப்புக்கு எதிராக வாக்களித்தவர்களிடம் விளக்கம் கேட்கவில்லை.

புனரமைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியை மூழ்கவிடாமல் காப்பாற்றும் முயற்சியில் சில முன்னணி உறுப்பினர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். கட்சி முழுமையாகப் புனரமைக்கப்படாவிட்டால் அது அரசியல் அரங்கிலிருந்து அந்நியமாவதைத் தவிர்க்க முடியாது எனக் கருதும் இவர்கள் தலைமை மாற்றம் உட்படப் பல மாற்றங்களைச் சிபார்சு செய்கின்றனர். உட்கட்சித் தேர்தல் மூலம் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் கட்சித் தலைமையை மாற்றுவதற்குத் தடையாக இருக்கும் யாப்பையும் மாற்ற வேண்டும் என்றும் இவர்கள் செய்த சிபார்சைக் கட்சியின் நிறைவேற்றுக்குழு ஏற்றிருக்கிறது.

இதை ஒரு பெரிய வெற்றியாகக் கட்சிக்குள் பேசிக் கொள்கின்றார்கள். ஆனால் ரணில் எவ்வளவு தூரம் இம்மாறங்களை ஏற்றுச் செயற்படுவார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தலைமைப் பதவியை விட்டுக்கொடுக்க ரணில் தயாராக இல்லை. தொடர்ந்தும் தலைவராக இருக்கப் போவதாக அண்மைய தோல்விகளுக்குப் பின்னரும் கூறினார். நிறைவேற்றுக் குழுவின் முடிவு மேலோட்டமானதாகவே இருப்பதால் ரணில் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்.

உட்கட்சித் தேர்தல் எனக் கூறியுள்ள போதிலும் எந்த மட்டத்தில் அத்தேர்தல் நடைபெற வேண்டும் என்பது தெளிவாகச் சொல்லப்படவில்லை. நிறைவேற்றுக் குழுவிலா? பொதுச் சபையிலா? அல்லது மாவட்ட மட்டத்திலா?

எந்தச் சீர்திருத்தமும் குறைந்த பட்சம் 75 வீத ஆதரவைப்பெற வேண் டும் என்று ரணில் அண்மையில் கூறி யிருக்கிறார்.

இவையெல்லாம் நிறைவேற்றுக் குழுவின் தீர்மானத்தை ரணில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்குக் கைகொடுக்கக் கூடியவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக