18 மே, 2010

இலங்கைத் தமிழர் வாழும் பகுதிக்கு ​காஷ்மீரைப் போல சுயாட்சி தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்



தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு,​​ காஷ்மீர் மாநிலத்தைப் போல சுயாட்சி அதிகாரம் அளிக்க வேண்டும் என்று பா.ம.க.​ நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.​ ​

இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் பா.ம.க.​ சார்பில் திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டது.​ ​

​ சென்னை,​​ சின்னமலைப் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.​ கட்சி நிறுவனர் ராமதாஸ்,​​ தலைவர் ஜி.கே.​ மணி,​​ முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.​ மூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பா.ம.க.வினர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்று,​​ மெழுகுவர்த்தியேற்றி அஞ்சலி செலுத்தினர்.​ ​

​ அந்நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசியதாவது:​ ​

​ இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.​ ஆனால்,​​ தமிழினம் தோல்வியடைந்ததாக வரலாறு இல்லை.​ தமிழ் ஈழம் மலர வேண்டும் என்ற எழுச்சி உலகெங்கும் உள்ள பல கோடி தமிழர்களிடம் இப்போது காணப்படுகிறது.​ எனவே,​​ தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகியே தீரும்.​ ​

​ இப்போது உடனடித் தேவையாக இலங்கையின் வடக்கு,​​ கிழக்குப் பகுதிகளை ஒன்றிணைத்து,​​ சுயாட்சி அதிகாரம் பெற்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும்.​ அந்த சுயாட்சி என்பது இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரத்தைப் போன்றதாக இருக்க வேண்டும்.​ இதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் குரல் கொடுக்க வேண்டும்.​ ​

​ சுயாட்சி பெற்ற மாநிலம் என்பது தாற்காலிக ஏற்பாடாகவே இருக்க வேண்டும்.​ இனி இலங்கையில் சிங்களர்களும்,​​ தமிழர்களும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை.​ எனவே,​​ தனித் தமிழ் ஈழமே இறுதித் தீர்வாக அமையும்.​​ இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக,​​ பா.ம.க.​ தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தன் கடமையைச் செய்து வந்துள்ளது.​ அந்தக் கடமை இனியும் தொடரும் என்றார் ராமதாஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக