10 மே, 2010

கேரளத்தில் கைதான 30 ஈழத்தமிழர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும்; டைரக்டர் சீமான் அறிக்கை



நாம் தமிழர் அமைப்பின் தலைவர் டைரக்டர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

இலங்கை போர் முடிந்து ஒரு வருடம் நிறைவடையும் நிலையில் முள்வேலி முகாம்களுக்குள் ஒரு லட்சம் மக்களை அடைத்து வைத்திருப்பதாக தெரிகிறது. முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சொல்லப்படும் மக்களை கூட இலங்கை அரசுஎவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத வனாந்தரங்களிலும், வெட்ட வெளி பொட்டல் காடுகளிலும் கொண்டு கொட்டுவதாக தெரிகிறது. உடுத்த உடையோ, குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளோ இல்லாமல் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கைக்குள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். வன்னி மக்களின் பாரம் பரீய வாழ்விடங்களை எல்லாம் ஆக்ரமித்து விட்ட சிங்களர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் சிங்கள ராணுவம் தமிழ் மக்களை அவர்களின் வீடுகளில் குடியேற விடாமல் தடுத்து வருகிறது. அவர்களின் விவசாய நிலங்கள் எல்லாம் சிங்களர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் கொட்டப்பட்ட இடங்களில் இருந்து அவர்கள் உயிர் தப்ப ஓடுகிறார்கள்.

உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடுகிற ஈழமக்கள் மலேசியாவில், ஆஸ்திரேலியாவில், இந்தோனேசியாவில் சிறைபடுகிறார்கள். சித்ரவதைக்குள்ளாகிறார்கள். ஈழ மக்களின் நிராதரவான இந்த நிலை ஆழ்ந்த துக்கத்தையும், கவலையையும், கண்ணீரையும் ஏற்படுத்தும் நிலையில் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் கேரளத்தில் நேற்று 30-க்கும் மேற்பட்ட ஈழ மக்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது. அவர்களிடம் முறையான பாஸ்போர்ட்டோ, விசாவோ இருக்கிறதா? என்று விசாரித்த கேரள போலீசார் வழக்கம் போல் அவர்கள் விடுதலைப்புலிகளா? என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்களாம். நிராதவரான முறையில் உயிர் தப்பி ஓடும் ஈழ மக்களிடம் எப்படி பாஸ்போர்ட்டும், விசாவும் இருக்கும். நிற்கவோ, படுத்து உறங்கவோ, உறவுகளோடு வாழவோ முடியாத நிலையில் ஓடும் ஈழ அகதிகளின் துன்ப வாழ்வை புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக தமிழக அரசு தலையிட்டு கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஈழ அகதிகளை பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் அவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைத்து விடும் மனித நேயமற்ற செயலை செய்துவிடக்கூடாது. அபாயகரமான சூழலுக்குள் சிக்கி கொண்டிருக்கும் ஈழ மக்களின் துன்பங்களை தமிழக அரசு புரிந்து செயல் பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக