15 மார்ச், 2010

சாட்சியம் வழங்குவது குறித்து சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படியே பொன்சேகா தீர்மானம் : ஜ.தே.கூ அறிவிப்பு


"அரசியல் பழிவாங்கலுக்குட்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரை இராணுவ நீதிமன்றத்தில் மாத்திரம், அல்ல, சிவில் நீதிமன்றத்தில் கூட நிறுத்த முடியாது. இந்த நிலையில் நாளைய தினம் அவர் சாட்சியங்களை வழங்குவதா இல்லையா என்பதை எமது சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளின் பிரகாரமே தீர்மானிப்பார்'' என்று ஜனநாயக தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது.

மூன்று குற்றப் பத்திரங்களினூடாக 7 குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்ற நிலையில் இன்று விசாரணைக்குட்படுத்தப்படும் ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மத வழிபாடுகளை நடத்துமாறு கேட்டுக் கொள்வதுடன் அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு நாளையும் நாளை மறுதினம் புதன்கிழமையும் பொது மக்கள் தமது எதிர்ப்பினைக் காட்டுமாறும் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கூட்டணியின் தேசிய பட்டியல் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதியையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் படுகொலை செய்வதற்காகவும் அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும் சூழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டே ஜெனரல் பொன்சேகா மீது முன்னதாக சுமத்தப்பட்டிருந்தது.

இதன் பின்னர் ஆயுதக் கொள்வனவில் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் அவர் இராணுவ சேவையில் இருந்த காலப்பகுதியில் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கள் உட்பட 7 குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

ஆயுதக் கொள்வனவு தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நோக்கும் போது ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலப் பகுதியில் சி.சி. தொலைக்காட்சிகள் 2, 12 வோல்ட் மெயின்டனன்ஸ் பிறீ பற்றறிகள் 50, டே விஷன் ரக தொலைநோக்கிகள் 250 மற்றும் 5 கிலோ பைட் ரக கள ஜெனரேட்டர்கள் 50 உள்ளிட்ட பொருட்களே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக ஜெனரல் பொன்சேகா மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரட்ன, தற்போது அரசில் அங்கம் வகிக்கின்ற ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்டோருடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனாலும் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, முன்னாள் எம்.பி.க்களான எல்லாவல மேதானந்த தேரர் மற்றும் உடுவே தம்மாலோக்க தேரர் ஆகியோரும் கூட ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தொடர்புகளை வைத்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராணுவத் தளபதியுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு உரிமை இல்லையா என்று கேட்க விரும்புகிறேன்.

ஊழல் மோசடிகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளிப்பட்டதுடன் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இதில் இடம்பெற்றுள்ள ஊழலை அரசு மூடி மறைத்து அற்ப விடயத்தை ஊதி பெருப்பித்துக் காட்டுகின்றது.

அதேபோல் இன்றைய அரசாங்கத்திற்கு பாரிய எதிர்ப்பு சக்தியாகவும் சவாலாகவும் ஜெனரல் பொன்சேகா விளங்கியமையினாலேயே அவரைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கு அரசு வழி தேடியது.

இந்த சூழலில்தான் ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு 16, 17 (அதாவது நாளை செவ்வாய்க்கிழமையும் மறுதினம் புதன்கிழமையும்) ஆம் திகதிகளை குறிப்பிட்டுள்ளது.

நாளைய தினம் இராணுவ நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்படும் பட்சத்தில் அங்கு அவர் சாட்சியம் அளிப்பது சந்தேகமாகும். தான் சாட்சியங்களை வழங்குவதா அல்லது இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியங்களை வழங்காதிருப்பதா என்பதை எமது சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே தீர்மானிப்பவராக இருக்கின்றார்" என்றார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவும் கலந்து கொண்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக