15 மார்ச், 2010

ஐ.ம.சு.முன்னணி நாடளாவிய ரீதியில் 40100 தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் ஜனாதிபதி கலந்து கொள்ளும் முதலாவது கூட்டம் கண்டியில்






எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி பிரதமர் உட்பட கட்சித்தலைவர்கள் பங்கேற்கும் நாடளாவிய ரீதியிலான சுமார் 40,100 தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் டளஸ் அழஹப் பெரும நேற்றுத் தெரிவித்தார்.

இரு தடவைகள் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் அடுத்தவார இறுதியில் முதற்கட்ட பிரசாரம் வீடு வீடாக நேரில் சென்று மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறினார். கொழும்பு 7 யிலுள்ள மகாவலி நிலையத்தில் ஐ.ம.சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (15) நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி கலந்து கொள்ளும் பிரதான பிரசார கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கண்டியில் ஆரம்பிக்கப்படும். ஜனாதிபதி நாடு பூராவும் 26 கூட்டங்களில் பங்குபற்றுவார். இது தவிர பிரதமர், அமைச்சர்கள், மற்றும் கட்சித் தலைவர்களின் தலைமையில் 74 பிரதான கூட்டங்கள் நடத்தப்படும்.

இதேவேளை தோட்ட மற்றும் சேரி மட்டத்திலான 10 ஆயிரம் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதோடு இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான தோட்ட மட்டக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதேவேளை சிறிய மட்டத்தில் 30 ஆயிரம் கூட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. எமக்கு கிடைக்க உள்ள வெற்றியை பெரு வெற்றியாக்கும் வகையில் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தேர்தல் தொடர்பாக 3 கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளதோடு முதலாவது கருத்துக்கணிப்பு நிறைவடைந்துள்ளது. அந்த முடிவுகள் அடுத்தவாரம் வெளியிடப்படும்.

ஐ.ம.சு. முன்னணி பிரசாரப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. எதிர்த்தரப்பு பிரசாரப் பணிகள் சுவரொட்டிகளுக்கும் தேர்தல் காரியால யங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் போட்டிகளின்றி மந்தமான தேர்தல் பிரசாரமே இடம்பெறுகிறது.

கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன் இணைந்திருந்த எதிர்க் கட்சிகள் இன்று பல்வேறு கூறுகளாக பிரிந்துள்ளன. தாம் இணைந்து செயற்பட்ட நோக்கம் நிறைவேறியதாலா அவை பிரிந்துள்ளன என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

2017 ஆம் ஆண்டு வரை ரணில் விக்ரமசிங்கவை எதிர்க் கட்சித் தலைவராக தக்கவைக்கவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எஸ். எப். என் இரண்டாம் கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக