3 பிப்ரவரி, 2011

கே.பி.அரசியலுக்குள் வருவதில் தவறில்லை ஆனால் பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும்

பயங்கரவாத தலைவர்களில் ஒருவரான கே. பி.எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் ஜனநாயக நீரோட்டத்துக்குள் நுழைவதில் எந்தத் தவறும் கிடையாது. இருப்பினும் எல்லாவற்றுக்கும் முதலாக சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் இந்நாட்டை மீட்டெடுத்தவருமான சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது கே. பி. புதிய அரசியல் கட்சியொன்றை ஸ்தாபிக்கவிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், எமது நாடு ஒரு ஜனநாயக நாடாகும். எனவே எவரும் ஜனநாயக நீரோட்டத்திற்குள் இணைந்து கொள்ள முடியும். அந்த வகையில் கே. பி. யும் அரசியலுக்குள் பிரவேசிக்கவோ அரசியல் கட்சியை ஸ்தாபிக்கவோ முடியும். அதில் தவறு கிடையாது.

இருப்பினும் பயங்கரவாதத்தை அழித்து இந்நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவரான முன்னாள் இராணுவத் தளபதி இன்று சிறைப்படுத்தப்பட்டிருப்பது வேதனையான விடயம். அவர் தொடர்பில் மக்களிடத்தில் இருக்கின்ற உணர்வுகளை எம்மால் காண முடிகின்றது. அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களினதும் ஆதங்கமாக இருக்கின்றது. எனவே கே. பி. புதிய கட்சி ஆரம்பிப்பது குறித்து பிரச்சினை இல்லை. ஆனால் அதற்கு முன்னர் சரத் பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக