3 பிப்ரவரி, 2011

கச்சத்தீவு ‘தானம்’ அரசு ஒப்பந்தம்- வரலாற்று பார்வை





தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கையில் இருந்து 13 மைல் தூரத்திலும் இது அமைந்துள்ளது.

முன்பு இந்தத் தீவு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால், இது தங்களுக்கே சொந்தம் என்று சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை உரிமை கொண்டாடியது. இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக் டெல்லி வந்திருந்த போது, பிரதமர் இந்திரா காந்தியுடன் இதுபற்றி பேச்சு நடத்தினார். கச்சத்தீவு பிரச்சினையில் உடன்பாடு காண்பது என்று அப்போது தீர்மானிக்கப்பட்டது.

“கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம். அதை இலங்கைக்கு தரக்கூடாது" என்று தமிழக அரசு வலியுறுத்தியது. முதல்_அமைச்சர் கருணாநிதி பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்த போது, இதை வலியுறுத்தினார்.

ஆனாலும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது என்று, மத்திய அரசு முடிவு செய்தது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு 28_6_1974 அன்று டெல்லியிலும், இலங்கையிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில், பிரதமர் இந்திராகாந்தி கையெழுத்திட்டார்.

கச்சத்தீவு 280 ஏக்கர் பரப்புள்ளது. கிழக்கு மேற்காக ஒரு மைல் நீளமும், தெற்கு வடக்காக அரை மைல் அகலமும் உள்ளது. அங்கு கிறிஸ்தவ கோவில் ஒன்று இருக்கிறது. ஆண்டுதோறும் கச்சத்தீவில் திருவிழா நடைபெறும்போது, இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் கிறிஸ்தவர்கள் படகுகளில் செல்வார்கள்.

இரு தேசங்களையும் சேர்ந்த மீனவர்களும் கச்சத்தீவுக்கு சென்று மீன் பிடிப்பது உண்டு. அங்கு சற்று ஓய்வு எடுத்து, மீன் வலைகளை காய வைப்பது உண்டு. கச்சத்தீவில் குடிதண்ணீர் இல்லை என்பதால், அங்கு மக்கள் நிரந்தரமாக தங்குவதில்லை.

கச்சத்தீவு தானம் கொடுக்கப்பட்டது பற்றி “ராமநாதபுரம் ராஜா" ராமசேதுபதி நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய சர்க்காரின் முடிவு துக்ககரமானது. கண்ணீர் விட்டு அழுவது தவிர வேறு வழி இல்லை" என்று கூறினார். தமிழரசு கழக தலைவர் ம.பொ. சிவஞானம் கூறியதாவது:-

“கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தமானது. இலங்கைக்கு அதன் மீது பாத்தியதை கிடையாது. சரியாகச் சொன்னால் தமிழகத்தின் ஒரு பகுதியாகவே அதனை கருதவேண்டும். இலங்கைக்கு அதனை வழங்கியது, சர்வதேச அரசிய லில் இந்தியா பலவீனமாக உள்ளதையே காட்டுகிறது.

தமிழகம் இந்திய அரசால் எவ்வளவு அலட்சியமாக நடத்தப்படுகிறது என்பதற்கு, இதுவும் ஒரு எடுத்துக்காட்டாகும். மத்திய அரசின் முடிவை மாற்ற முடிகிறதோ இல்லையோ, அதனை எதிர்ப்பதன் மூலம் தன்னுடைய தன்மான உணர்வை தமிழகம் வெளிப்படுத்தவேண்டும்.

மேலும் எதையும் சொல்வதற்கு முன்பு தமிழக அரசின் கருத்து அறிய காத்து இருக்கிறேன்." இவ்வாறு ம.பொ.சிவஞானம் கூறினார்.

பிரதமர் இந்திரா காந்திக்கு தந்தி ஒன்றையும் அனுப்பினார்.

முன்னதாக “கச்சத்தீவு பிரச்சினை பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று பிரதமர் இந்திரா காந்தி எழுதிய கடிதத்துக்கு 1974 ஜனவரி 6_ந்தேதி (அதாவது 6 மாதங்களுக்கு முன்பு) முதல்_அமைச்சர் கருணாநிதி பதில் எழுதினார். அந்த கடித விவரம் வருமாறு:-

“கச்சத்தீவு பிரச்சினை குறித்து வெளிநாட்டு இலாகா செயலாளர் கேவல்சிங் என்னுடன் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து, எனது இலாகா அதிகாரிகள் கச்சத்தீவு பற்றிய ஆதாரங்களை சேகரித்தார்கள். கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக ஒருபோதும் இருந்ததில்லை என்று நிரூபிப்பதற்கு தேவையான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன.

நெதர்லாந்து நாட்டு மன்னருக்கும், கேன்டி அரசருக்கும் இடையே 14_2_1766_ல் ஏற்பட்ட ஒப்பந்தம், டச்சு நாட்டிடம் இருந்த கடற்கரை பகுதிகள் இங்கிலாந்து அரசுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஒப்பந்தம், 17_3_1762_ல் ஜான் சுரூடர் என்பவர் எழுதிய நினைவுக் குறிப்புகள், டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரை படங்கள் ஆகிய எல்லா குறிப்புகளும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை காட்டவில்லை.

1954_ம் ஆண்டு வெளியான இலங்கையின் வரைபடத்திலும் (“மேப்") கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக குறிக்கப்படவில்லை.

நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டு கடற்கரை பகுதியில் முத்து குளித்தல், சங்கு எடுப்பு ஆகிய உரிமைகள் ராமநாதபுரம் ராஜா உள்பட தென்இந்திய மன்னர்களுக்கே உரித்தானது என்பதை வரலாற்று ஆதாரங்கள் காட்டுகின்றன.

கச்சத்தீவுக்கு செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்குபகுதி கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக, அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கட்டியது இல்லை.

இப்போது கிடைத்து இருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த அகில உலக கோர்ட்டிலும் எடுத்துக்கூறி நிரூபிக்க முடியும் என்று சென்னை சட்டக்கல்லூரியின் ஆராய்ச்சிப்பிரிவு கருத்து தெரிவித்து இருக்கிறது.

எனவே, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும்பொழுது இந்த ஆதாரங்களை எடுத்துக்காட்டி “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமல்ல" என்று நிரூபிக்க முடியும் என்று எண்ணுகின்றேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டு இருந்தார்.

கச்சத்தீவு தானம் வழங்கப்பட்ட விவகாரத்தில் தமிழக காங்கிரசாரிடையே பிளவு ஏற்பட்டது. மத்திய அரசின் முடிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ராமையா, முன்னாள் முதல்_மந்திரி பக்தவச்சலம் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் சட்டசபை இ.காங்கிரஸ் தலைவரான ஏ.ஆர்.மாரிமுத்து, முதல்_அமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, “கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கக்கூடாது" என்ற தீர்மானத்தில் கையெழுத்து போட்டார். இதேபோல் மேல்_சபை இ.காங்கிரஸ் உறுப்பினர் ஆறுமுகசாமியும், தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டார்.

இந்திரா காந்தியுடன் இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக்.
கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு தானம் செய்தது பற்றி விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை முதல்_அமைச்சர் கருணாநிதி கூட்டினார்.

இந்த கூட்டத்தில் பொன்னப்ப நாடார் (ப.காங்கிரஸ்), ஏ.ஆர்.மாரிமுத்து (இ.காங்கிரஸ்), திருப்பூர் மொய்தீன் (முஸ்லிம் லீக்), அரங்கநாயகம் (அ.தி.மு.க.), வெங்கடசாமி (சுதந்திரா), ஈ.எஸ்.தியாகராஜன் (தமிழரசு கழகம்), ஏ.ஆர்.பெருமாள் (பார் வர்டு பிளாக்), மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்ஸி னிஸ்டு), ம.பொ. சிவஞானம் (தமிழரசு), ஜி.சாமி நாதன் (சுதந் திரா), அப்துல் வகாப் (முஸ்லிம் லீக்), ஆறுமுகசாமி (இ.காங்.), சக்தி மோகன் (பா.பிளாக்), ஏ.ஆர். தாமோதரன் (ஐக்கிய கட்சி) ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

வ.கம்ஸினிஸ்டு பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. எஸ்.எஸ்.ராம சாமி படையாச்சி (உழைப்பாளர் கட்சி) வந்த கார், வழியில் பழுதடைந்ததால் கூட்டத்துக்கு அவரால் வரமுடியவில்லை. ஆயினும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஆதரிப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.

தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன் அ.தி.மு.க. பிரதிநிதி வெளிநடப்பு செய்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான வாசகம் வருமாறு:-

“இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்து, தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது."

மேற்கண்டவாறு தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானம், பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்_அமைச்சர் கருணாநிதி நிருபர்களிடம் கூறினார். அவர் மேலும் சொன்னதாவது:-

“கூட்டத்துக்கு வந்திருந்த எல்லா கட்சித் தலைவர்களும் தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள். அ.தி.மு.க. பிரதிநிதி, தீர்மானத்தில் கையெழுத்து போட மறுத்துவிட்டு போய்விட்டார். கச்சத்தீவு பிரச்சினையில் தமிழ்நாடு அரசு ராஜினாமா செய்யவேண்டும் என்று தீர்மானம் போடும்படி அவர் சொன்னார். அது ஏற்றுக்கொள்ளப்படாததால், வெளியேறினார்.

இ.காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிக்காரர்களும் கொடுத்த திருத்தங்களை ஏற்றுத்தான் இந்த தீர்மானம் முடிவு பெற்று இருக்கிறது."

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று ஜனசங்க தலைவர் வாஜ்பாய் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு ஜனசங்க செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக