14 மார்ச், 2011

இன்னொரு இனத்துடன் பகைமை காட்டி நாட்டை முன்னேற்ற முடியாது திருகோணமலையில் ஜனாதிபதி உரை


இன்னொரு இனத்துடன் எப்போதும் பகைமை பாராட்டி, சண்டை பிடித்து, நாட்டைப் பிரித்துக்கொண்டு எம்மால் ஒருபோதும் முன்னேற முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று திருகோணமலையில் தெரிவித்தார்.

இன, மத, மொழி, குல மாகாண பேதங்களையும், பகைமை, குரோதங்களையும் மறந்து சகலரும் ஒன்றுபட்டால் தான் நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.

நாம் பிறந்த இந்தத் தாயகத்தைப் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு மேம்படுத்துவது எம்மெல்லோரதும் பொறுப்பு என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒழுங்கு செய்திருந்த திருகோணமலை மாவட்ட மாநாடு திருமலை மெக்கைஸர் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இம்மாவட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பொலிஸாரின் அறிக்கை படி இப்போது தேர்தல் தொடர்பான வன்முறைகளும், சண்டைகளும் கட்சிகளுக்கிடையில் இடம்பெறுவது மிகவும் குறைந்து விட்டது.

ஆனால், கட்சிக்குள்ளான அபேட்சகர்களுக்கிடையில் தான் அதிக சண்டைகளும், மோதல்களும் இடம்பெறுகின்றன. விருப்பு வாக்குக்காகவே இச்சண்டை இடம்பெறுகின்றது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.

ஜயவர்தன தயாரித்து வழங்கிய தேர்தல் முறையின் பிரதிபலிப்புத் தான் இது. ஆளுக்காள் சண்டை பிடித்துக்கொள்ளும் தேர்தல் முறையைத் தான் அவர் எமக்கு வழங்கியுள்ளார்.

எம்மால் எப்போதும் இன்னொரு இனத்துடன் பகைமை பாராட்டி, சண்டை பிடித்து, நாட்டை பிரித்துக் கொண்டு வாழவும் முடியாது. அபிவிருத்தி அடையவும் முடியாது. அதனால் இது நாம் பிறந்த மண். நாம் இன, மத, குல, மொழி, மாகாண பேதங்களை மறந்து ஒன்றுபட்டுச் செயற்பட்டால் தான் எம்மால் முன்னேற முடியும் இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும். நாம் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு எமது தாயகத்தைக் கட்டியெழுப்புவது அவசியம்.

சிலர் எம்மை வெட்டினாலும் பச்சை அல்லது நீலம் அல்லது மஞ்சள் அல்லது சிவப்பு என்றபடி கூறுவார்கள். ஆனால், எமது உடம்மை வெட்டினால் சிவப்பு நிற இரத்தம் தான் வரும். என்றாலும் பசிவரும்போது இந்த நிறங்கள் எமக்கு உதவாது.

எமது கிராமங்களில் பாதைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் சீரில்லாவிட்டால் நாம்தான் கஷ்டப்பட நேரிடும். துன்பங்களை அனுபவிக்க வேண்டும்.

நாட்டில் சுபீட்சத்தையும், விமோசனத்தையும் ஏற்படுத்தக் கூடியவர்கள் நாமே என்பதை நிரூபித்துள்ளோம். இதனை எல்லா அரசியல் கட்சிகளும் புரிந்து கொண்டிருக்கின்றன.

வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டிலும், பாரிய அபிவிருத்தி இடம்பெறுகின்றது. கிழக்கு அபிவிருத்திக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுகின்றோம். இன்று கொழும்பு, மட்டக்களப்பு உட்பட முழு நாட்டுக்கும், துரிதமாக செல்லக் கூடிய வகையில் பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

திருமலை ஆஸ்பத்திரி ஐநூறு மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. அன்று இப்பகுதியில் நிலவிய நிலமை இப்போது இங்கில்லை. கடலில் மீன்பிடிக்கவோ, விவசாயம் செய்யவோ இப்போது தடைகள் எதுவும் கிடையாது.

திருமலை மாவட்டம் உட்பட முழு நாட்டையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம். இதன் நன்மைகளை இந்நாட்டு மக்களும், அவர்களது எதிர்கால சந்ததியினரும் அனுபவிப்பர். உங்களை நான் பாதுகாப்பேன்.

நான் உங்களது தோழன். உங்களது உறவினன். நான் உங்களை நம்புகின்றேன். நீங்கள் என்னை நம்புங்கள். 17ம் திகதி வெற்றிலை சின்னத்தை அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார்.

இம்மாநாட்டில் அமைச்சர் எஸ். எம். சந்திரசேன, பிரதியமைச்சர்கள், சுசந்த புஞ்சிநிலமே, எம். கே. டி. எஸ். குணவர்தன, மாகாண ஆளுநர்கள் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார, ரியர் அட்மிரல் மொகாக் விஜேவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தெளபீக், முன்னாள் பிரதியமைச்சர் நஜீப் ஏ. மஜீத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக