10 பிப்ரவரி, 2011

நாட்டில் ஏப்ரல் மாதத்தின் பின்னர் பாரிய உணவுத்தட்டுப்பாடு ஏற்படும்


இலங்கையில் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் பாரியளவு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பொய் உரைக்காது உண்மையான நிலைவரங்களை வெளியிட வேண்டும் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி கோரியுள்ளது.

வெள்ளப் பாதிப்பேற்பட்ட பிரதேசங்கள் உட்பட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மரவள்ளி மற்றும் வத்தாளை போன்ற கிழங்கு வகைகளை பயிரிட பொது மக்களை அரசாங்கம் உடனடியாக ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் ஏற்படப் போகும் ஆபத்துக்களில் இருந்து நாட்டைகாக்க முடியும் என்றும் அம் முன்னணி குறிப்பிட்டுள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று பதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய அக்கட்சியின் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான பியசிறி விஜேநயக கூறுகையில்,

முழு உலகமுமே காலநிலை மாற்றத்தினால் பல்வேறு வகையில் இயற் கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. இந்த அனர்த்தங்களினால் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்று ஐ.நா. உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்வு கூறியுள்ள இந்த நிலை இலங்கைக்கும் உள்ளது. இலங்கையில் ஏற்பட்ட அடை மழை, வெள்ளம் காரணமாக 50 சதவீதமான விவசாய நிலங்கள் முழு அளவில் அழிந்தும் ஏனைய உற்பத்திகள் பாதிக்கப்பட்டும் உள்ளன. எனவே களஞ்சியசாலைகளில் உள்ள இருப்புகள் தேசிய உணவுப் பற்றாக்குறையை தடுக்க போதுமானதல்ல. மீண்டும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு உற்பத்திகளை பெறும்வரை மாற்று வழிகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

போலியான தரவுகளை வெளியிட்டு தேர்தல் நன்மைக்காக மக்களை காட்டிக் கொடுக்கமுடியாது. இன்று அரசாங்கத்திற்குள் பொருளாதார துரோகிகள் உள்ளனர். எனவே குறுகியகாலத்திற்குள் பயன்தரக் கூடிய மரவள்ளி மற்றும் வத்தாளை போன்ற கிழங்கு வகைகளை பயிரிட மக்களை வழி நடத்த வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக