9 ஜூலை, 2010

குற்றம் இழைக்கப்பட்டிருப்பின் ஆபத்தில் விழுகின்ற முதலாவது நபர் நானே



யுத்த களத்தில் குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால் அந்தச் சந்தர்ப்பத்தில் பொறுப்பானவன் என்ற அடிப்படையில் முதலில் ஆபத்தில் விழுகின்ற நபர் நானாகத்தான் இருப்பேன். கூண்டில் போடப்படுபவரும் நான்தான். எனவே அவ்வாறான குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை நான் ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்து விட்டேன் என்று முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகா எம்.பி. தெரிவித்தார். பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நிறுவப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவுக்கு ஜெனரல் சரத் பொன்சேகா சாட்சியம் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கின்றதே என்று ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ஜெனரல் பொன்சேகா எம்.பி. கூறுகையில்,

யுத்தக் குற்றம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றிருக்குமானால் அது தொடர்பில் யார் சாட்சியமளித்தாலும் அதில் முதலாவதாக சிக்கலுக்குள் அல்லது ஆபத்துக்குள் விழுகின்ற நபராக நானே இருக்கின்றேன்.

இராணுவத் தளபதி என்ற வகையில் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை கொண்டு நடத்தியது நான்தான். அந்த வகையில் யுத்த களத்தில் இடம்பெற்ற அனைத்து விடயங்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டியுள்ளவனாக இருக்கிறேன். இதனை நான் ஏற்கெனவே பகிரங்கமாக அறிவித்திருக்கிறேன். அதனை தொடர்ந்து கூறி வருகிறேன். முன்னெடுக்கப்பட்ட யுத்தமானது சர்வதேச சட்டத்துக்கு அமைவாகவே இருந்தது. இதில் யுத்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாக கூற முடியும்.

அத்துடன் இலங்கையில் கடப்பாடுகள் குறித்து ஆராய்ந்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கென ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் உண்மையான நிலைப்பாடுகள் பற்றி தவறானதும் திரிபுபடுத்தப்பட்டதுமான கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்ற ஒரு சில கோமாளிகளை அரசாங்கம் உற்சாகப்படுத்தி அல்லது ஊக்குவித்து வருகின்றமையைக் காண முடிகின்றது.

இவ்வாறான கோமாளிகள் இன்று தாங்களே யுத்தத்தை மேற்கொண்டது போலவும் அதில் கிடைத்த வெற்றிக்கு தாங்களே காரணகர்த்தாக்கள் என்பது போலவும் பேசி வருகின்றனர். அத்துடன் சரத் பொன்சேகா வெளியில் சென்றால் பாரிய சிக்கல் வந்து விடும் என்றும் கூறுகின்றனர். எனவே எதை எதையோ மறைத்து இங்கு பிரச்சினை இருப்பதைப் போன்ற மாயையை தோற்றுவிக்கின்றனர்.

நான் பொய் சாட்சி சொல்லப் போவதாகக் கூறுகின்றனர். அவ்வாறு பொய் சாட்சி கூற வேண்டிய தேவையும் அவசியமும் எனக்குக் கிடையாது. இந்தக் கோமாளிகள்தான் பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். மேலும் எமது நாட்டுக்கு கிடைக்கவிருந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட்டமையானது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை நம்பிக்கை இழந்து வருவதன் ஒரு வெளிப்பாடாகவே அமைந்திருக்கின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக