30 டிசம்பர், 2010

கொழும்பில் ஏழு நட்சத்திர ஹோட்டல்

கொழும்பில் ஏழு நட்சத்திர ஹோட்ட லொன்றை அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்ட சங்கிரிலா நிறுவனக் குழுமம் கைச்சாத்திட்டுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் அனுமதியுடன் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டது. காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள அரசாங்கக் காணியில் நட்சத்திர விடுதியை அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் அரசாங்கப் பிரதி நிதிகளும், சங்கரி-லா நிறுவனப் பிரதிநிதிகளும் கைச்சாத்திட்டனர்.

இத்திட்டத்துக்கு 10 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், இதுவரை 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

இலங்கையில் அமைக்கப்படவிருக்கும் ஏழு நட்சத்திர ஹோட்டலுக்கு சங்கிரி-லா நிறுவனம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளது. இந்த ஹோட்டல் 500 அறைகளைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சங்கிரி-லா ஹோட்டல் நிறுவனத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கொழும்பில் ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆராய்ந்து சென்றிருந்தார்.

1971ஆம் ஆண்டு சிங்கப்பூரில் முதன் முதலில் சங்கிரி-லா உல்லாச நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அவுஸ்திரேலியா, கனடா, நேபால், ஓமான், தாய்வான், மலேசியா, மாலைதீவுகள் உட்பட பல நாடுகளில் 66 ஹோட்டல்களை சங்கிரி-லா நிறுவனம் அமைத்துள்ளது. ஆசியாவில் சங்கிரி-லா நிறுவனம் முன்னணி நட்சத்திர ஹோட்டல்களைக் கொண்டதொரு நிறுவனமாகக் காணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக